சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தனது உற்பத்தித் திறன் மூலம் 15 சதவீத சந்தையை ஆட்சி செய்து வரும் சவுதி அரேபியா எண்ணெய் கிடங்குகளில் ஈரான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் எதிரொலியாகக் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கச்சா எண்ணெய் விலை ஓரே நாளில் 19.5 சதவீதம் உயர்ந்து மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சவுதி அரேபியா
கச்சா எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆளுமை செலுத்தி வரும் சவுதி அரேபிய நாட்டின் Abqaiq மற்றும் Khurais பகுதிகளில் இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி கிடங்குகளில் ஈரான் நாட்டுத் தீவிரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுத் தீ பற்றி எரிந்தது. இதனால் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் இது சர்வதேச பிரச்சனையாகவும் மாறியுள்ளது.
50 சதவீத உற்பத்தி
தாக்குதலுக்கு உட்பட்ட Abqaiq உற்பத்தி ஆலையில் தினமும் 7 மில்லியன் பேரல் அளவிலான லைட் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இது சர்வதேச சந்தையில் மிகவும் முக்கியமான தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விரு தொழிற்சாலையின் உற்பத்தி சவுதி அரேபியாவின் மொத்த உற்பத்தி அளவில் 50 சதவீதமும், சர்வதேச சந்தையில் 5 சதவீத அளவையும் கொண்டு உள்ளது. இதைக் கணக்கில் வைத்துக்கொண்டே தாக்குதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
விநியோகம் பாதிப்பு
இரண்டு முக்கியமான தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் இதன் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது மட்டும் இந்தத் தாக்குதலால் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் அளவு பாதிக்கப்படும் நிலையில் இருந்த போது சவுதி இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் சரியான வகையில் விநியோகம் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
1991 முதல்..
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், கடந்த 28 வருடங்களில் அதாவது 1991ஆம் ஆண்டு முதல் எப்போது இல்லாத வகையில் பிரென்ட் பியூச்சர்ஸ் விலை ஓரே நாளில் 19.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்
இதன் பாதிப்பு இந்திய நிறுவனங்கள் மத்தியிலும் அதிகளவில் தெரிந்தது.
சவுதி அரேபியாவின் உற்பத்தி பாதிப்புகளை 48 மணிநேரத்தில் சரி செய்ய உள்ளதாக அறிவித்தும் இந்திய பங்குச்சந்தையில் இந்தியன் ஆயில் 3 சதவீதமும், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற முன்னணி பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தலா 5 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதேபோல் ஸ்பைஸ்ஜெட், இன்டர்குளோப் போன்ற விமான நிறுவனங்கள் 5 சதவீதம் வரையில் சரிந்தது. ஏசியன் பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ் மற்றும் கான்சாய் நெரோலாக் நிறுவனங்கள் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.