வருமானவரி என்றால் என்ன? ஒருவர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்துவது தான் வருமான வரி. அதையும் அவர் சம்பாதித்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டும்.
ஆனால் இங்கு அரசியல்வாதிகளுக்கு வருமான வரியைக் கூட அரசாங்கங்களே தான் கட்டிக் கொடுக்கின்றன என்றால் நம்புவீர்களா..? வேறு வழி நம்பித் தான் ஆக வேண்டும்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, இமாசல பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையில் இருக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் வருமான வரிகளை மாநில அரசு கஜானக்கள் தான் கட்டிக் கொடுக்கிறார்களாம்.
ஜாலி தான்
ஆக இந்த ஐந்து மாநிலங்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள், வாங்கும் சம்பளத்துக்கு, வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. சமீபத்தில் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1981 ஆம் ஆண்டு முதல் அனைத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும், உபி அரசு அரசு கருவூலமே வருமான வரி கட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் விஷயம் வெளியானது. இந்த விஷயம் தற்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு சென்ற உடன், இந்த சட்டத்தை திருத்தி அமைப்பதாக சொல்லியிருக்கிறார்.
சட்டம்
அமைச்சர் பெருமக்கள் மற்றும் முதல்வர்களுக்கு அரசு கருவூலங்களை வருமான வரி செலுத்தி கொடுக்கும் அந்த சட்டத்தின் பெயர் UP Ministers' Salaries, Allowances and Miscellaneous Act, 1981. உத்திரப்பிரதேச மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு 1981ஆம் ஆண்டு முதல் இந்த சலுகைகள் என்றால் ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் இதில் சீனியர்கள். இந்த அரசியல்வாதிகளுக்கு 1966 ஆம் ஆண்டு முதல் இந்த சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பஞ்சாப்
அவ்வளவு ஏன்..? பஞ்சாப் மாநிலத்தில் கூட கடந்த மார்ச் 2018 வரை முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு, பஞ்சாப் மாநில அரசு கருவூலங்கள் தான், வருமான வரியைச் செலுத்தி வந்தது. தற்போதைய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரேந்தர் சிங், சமீபத்தில் தான், கிழக்கு பஞ்சாப் அமைச்சர்கள் சம்பள சட்டம் 1947-ஐ நடைமுறைக்குக் கொண்டு வந்து, அரசு கருவூலங்கள் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு வருமான வரி செலுத்தும் அவலத்தை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 2018 வரை இந்த சலுகை வழங்கப்பட்டு வந்தது.
2000 முதல்
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து நவம்பர் 2000 ஆண்டு வாக்கில் தனியாக பிரிந்த உத்தராகண்ட் மாநிலமும், இந்த சலுகை நடைமுறையை பின் பற்றி வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டசபை அவைத் தலைவர் மற்றும் சட்டசபை அவை துணை தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பலரும் செலுத்த வேண்டிய வருமான வரியை, மாநில அரசு தன் கஜானாவில் இருந்து செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய உத்தராகண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத், இந்த வருமான வரிச் சலுகைச் சட்டத்தை மாற்றி அமைப்பதாகச் சொல்லி இருக்கிறார்.