மும்பை: அடுத்து வரும் சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் மற்றும் எண்ணெய் வயல் தாக்கப்பட்டதையடுத்து, ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 6 டாலர் அதிகரித்து, சர்வதேச சந்தையில் பேரலுக்கு 67 டாலராக வர்த்தகமாகியது.
இது கிட்டதட்ட 10 சதவிகித ஏற்றமாகும். இந்த விலை ஏற்றத்தினால் ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்கள் தங்களது சில்லறை விற்பனை விலையை, விரைவில் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல், கேஸ் விலை ரூ.5 – 6 அதிகரிக்கலாம்
உலகளவிய சந்தைகளில் அதிகப்படியான விலை, குறைந்த தேவை காராணமாக ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் அடுத்து வரும் 15 நாட்களில் டாலரில் பேரலுக்கு 10 டாலர் வரை அதிகரிக்கலாம் என்றும், இதனால் இந்தியாவைப் பொறுத்த வரை பெட்ரோல் டீசல், கேஸ் விலை லிட்டருக்கு 5 - 6 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்றும் கோட்டாக் செக்யூரிட்டீஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.
பங்குகள் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இந்திய சுத்திகரிப்பாளர்களின் பங்கு விலைகள் இங்கு, இந்திய சந்தைகளில் படு வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கு விலை 7% வீழ்ச்சி கண்டு 380.10 ரூபாயாகவும், இதே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 5.7% வீழ்ச்சி கண்டு 255.55 ஆகவும், இதே சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 3% வீழ்ச்சி கண்டு 188.75 ரூபாயாகவும் உள்ளது.
ஆயில் உற்பத்தி குறைந்தது
சவுதி அராம்கோ எண்ணெய் ஆலையும், அதன் எண்ணெய் வயலும் தாக்கப்பட்டதையடுத்து, உற்பத்தியானது 5.7 மில்லியன் பேரல்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டதட்ட பாதிக்கும் மேல் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் 6% சப்ளை செய்யும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்றும், அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு இதனால் பாதிப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தாக்கம்
சர்வதேச அளவில் எண்ணெய் விலை பேரலுக்கு 6 - 7 டாலர் அதிகரிக்கும் பட்சத்தில் அது இந்தியாவில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதே 70 - 75 டாலருக்கும் மேல் செல்லும் போது, இந்திய விலை நிர்ணயம் பற்றி அரசு யோசிக்க தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக இந்தியாவில் இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஏர் இந்தியா கட்டணம் உயருமா?
சர்வதேச அளவில் எரி பொருள் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டுள்ள நிலையில், இங்கு 10% எரிபொருள் விலை அதிகரிக்கிறது எனில், அதன் மாதம் எரிபொருள் கட்டணத்தில் கூடுதலாக 50 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதோடு தற்போதைக்கு உடனடி விளைவு எதுவும் இல்லை என்றாலும், இன்னும் விலை அதிகரிப்பு தொடர்ந்தால், விமான கட்டணங்களை உயர்த்த வேண்டி இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.