டெல்லி : விரைவில் அரசுக்கு சொந்தமான சில வர்த்தக நிறுவனங்களை அரசு மூட திட்டமிட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (State Trading Corporation), புராஜெக்ட் மற்றும் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (Project and Equipment Corporation), மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் (Metals & Minerals Trading Corporation) உள்ளிட்ட மூன்று மாநில வர்த்தக நிறுவனங்களையும் மூட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
விரைவில் இது குறித்தான அறிக்கையை, வர்த்தகத் துறை அமைச்சரவையில் தாக்கல் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை மூட முடிவு
இந்த பொதுத்துறை நிறுவனங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, பின்னரே மூட முடிவு செய்யப்பட்டது என்றும், இது கடந்த மாதமே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், எனினும் அமைச்சரவைக்கு அனுப்ப வேண்டிய இது குறித்தான இறுதி குறிப்பை இன்னும் வர்த்தக துறை இறுதி செய்யவில்லை என்றும், அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசிடமே 90% பங்குகள்
அரசுக்கு சொந்தமான இந்த ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், புராஜெக்ட் மற்றும் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன், மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட இந்த நிறுவனங்களின் பங்குகளில், 90 சதவிகிதம் அரசிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவினைக் குறைக்க விருப்ப ஓய்வு
கடந்த ஆண்டு ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம், செலவை குறைப்பதற்காக 600 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும், இதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த கடன்
இந்த நிலையில் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 2018 - 2019ம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இதன் மொத்த கடன் 2,181 கோடி ரூபாய் என்றும், இதே கடந்த மார்ச் மாதத்தில் இந்த நிறுவனத்தின் கடன் தொகை 625 கோடி ரூபாய் இருப்பதாகவும், இதற்காக சிண்டிகேட் வங்கி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதே மார்ச் 2019 நிலவரப்படி மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கடன் தொகையானது 961.5 கோடி ரூபாய் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications