இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மதியம் 3 மணி அளவில் இ சிகரெட்டுகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய, விற்க, விளம்பரம் செய்ய, ஏற்றுமதி செய்ய, இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க என அனைத்துக்கும் தடைவிதித்து இருக்கிறார்கள்.
இந்த ஒரே ஒரு விஷயத்தில், கடந்த சில மாத காலங்களாக தொடர்ந்து இறக்கம் கண்டு வந்த ஐடிசி நிறுவன பங்குகள் விலை இன்று ஒரு சிறிய ஏற்றம் கண்டு இருக்கிறது. ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த ஒரு வருட காலத்தில் அதிகபட்சமாக 310 ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த மே 2019 காலத்தில் தான் இந்த 310 ரூபாய் என்கிற உச்ச விலையை தொட்டு வர்த்தகம் ஆகி இருக்கிறது.
அதன் பின் தொடர்ச்சியாக உலகப் பொருளாதார காரணிகள், இந்திய உள்நாட்டு பொருளாதார மந்த நிலை, மக்கள் கையில் நுகர்வு சக்தி குறைவாக இருப்பது, நுகர்வு சக்தி குறைவால் நிறுவனத்தின் விற்பனை அளவு குறைந்தது என பல சிக்கல்களை எதிர் கொண்டிருக்கிறது ஐடிசி நிறுவனம்.
மேலே சொன்ன அனைத்து சிக்கல்களின் வெளிப்பாடாக ஐடிசி நிறுவன பங்கின் விலையும் தொடர்ச்சியாக சரிந்து வந்திருக்கிறது. குறிப்பாக மே 2019-ல் 310 ரூபாய் என்கிற தன் உச்ச விலையில் இருந்து, இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை தன்னுடைய ஒரு வருட குறைந்தபட்ச விலையான 234 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இ சிகரெட் தொடர்பான அறிவிப்புகள் வெளியான பின் உடனடியாக சுமார் நான்கு ரூபாய் 90 பைசா வரை அதிகரித்து வர்த்தகமாகி நிறைவு அடைந்து இருக்கிறது ஐடிசி நிறுவனப் பங்குகள்.
ஒரு வேளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள், இன்று சந்தை வர்த்தக நேரத்திற்குப் பின் வந்திருந்தால், ஐடிசி நிறுவன பங்குகளின் 52 வார குறைந்தபட்ச விலை 234 ரூபாய்க்கு கீழ் சென்று முடிந்திருக்க கூட வாய்ப்பு இருக்கிறது என்பதை ஐடிசி நிறுவன பங்கு விலை சார்ட்டை பார்த்தாலே அப்பட்டமாக தெரிகிறது.
சரி ஐடிசி ஒரு பக்கம் இருக்கட்டும். இளைஞர்களின் உடல் நலம் மீதான அக்கறையினால் e-cigarette-க்கு தடை விதித்து இருக்கிறோம் என்கிறது அரசு. அப்படி என்றால் சாதாரன சிகரெட்டுகளை பிடித்தால் உடல்நலம் கெடாதா..? என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு அரசு தான் விடை கொடுக்க வேண்டும்.