டெல்லி : இந்தியா பொருளாதார வளர்ச்சி மந்த நிலையை கண்டு வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இந்த நிலையில் சவுதி அரேபியாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் உயர்ந்து வரும் ஆயில் விலை, மீண்டும் இந்திய வளர்ச்சிக்கு ஒரு தடையாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
10 ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்ட சவுதி அராம்கோ நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் எண்ணெய் வயல், உலகின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டதாகும். இந்த தாக்குதலால் இந்த நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் உற்பத்தி செய்யப்படும் இந்த நிறுவனம் தாக்கப்பட்டதையடுத்து, உலக ஆயில் டிரேடர்ஸ் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்குமே என்ற பயத்திலேயே உள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு 20% ஏற்றம் கண்டுள்ளது கச்சா எண்ணெய் விலை.
இந்த திடீர் ஏற்றத்தால் இந்தியாவுக்கு அனுப்பப்படும் எண்ணெய் குறையலாம் என்றும், இதனால் விலை கடுமையாக அதிகரிக்கக் கூடும் என்றும், இதனால் இந்தியா மேலும் பிரச்சனையை சந்திக்க கூடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உபயோகப்படும் மொத்த எண்ணெயில், 80% இறக்குமதி செய்யப்படும் நிலையில், சவுதி அரேபியா தான் இராண்டாவது முக்கிய இறக்குமதியாளராக இருக்கிறது.
அதிலும் இந்தியா கடந்த 2017லிருந்து, எண்ணெய் இறக்குமதிக்கு, மற்ற நாடுகளை சார்ந்திருப்பது மிக அவசியமாக ஒன்றானதாகி விட்டது. இந்த நிலையில் கடந்த 2018 - 2019ல் இந்திய ஆயில் நுகர்வு 211.6 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
இதே நேரம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த 2015 - 2016ல் 36.9 மில்லியன் டன்னாக இருந்த உற்பத்தி, 2016 - 2017ல் வெறும் 36 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. இது 2019ம் நிதியாண்டில் 34.2 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா தனது ஆயில் தேவைக்காக அயல் நாடுகளையே சார்ந்துள்ள நிலையில், தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்காக செலுத்த வேண்டிய தொகையும் அதிகரித்துள்ளது.
இந்தியா ஏற்கனவே மிக மோசமான பொருளாதார நிலையை சந்தித்து வரும் நிலையில், நிறைய வேலையிழப்புகள், பொருளாதார சரிவு என தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இது மேலும் பனவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது, இந்தியாவின் பொருளாதாரத்தை, இன்னும் பின்னடைய செய்யும் என்றும், இதன் எதிரொலியே இந்த பங்கு சந்தைகளிலும் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமையன்று காணப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆயில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் சவுதி இது வரை இந்தியாவுக்கு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக செப்டம்பர் மாதத்திற்கான தேவையில் பாதியை நாங்கள் உயர்த்தியுள்ளோம். எனினும் சவுதி அரேபியா தனது பிரச்சனையை விரைவில் மீட்டெடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்பிரச்சனை தொடர்ந்தால் அது இந்தியாவுக்கு பிரச்சனையே என்றும் கூறியுள்ளார்.