பெங்களூரு: இந்தியாவில் ஐடி மற்றும் ஐடி சார் நிறுவனங்களை நம்பி சுமார் 40 லட்சம் பணியாளர்கள் இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்தியாவில் கடந்த 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் படு பயங்கரமாக அதிகரித்து இருக்கிறது. அதை சமாளிக்க அரசும் தன்னால் முடிந்த வரை முட்டி மோதிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் கொஞ்சம் நமக்கும், அரசுக்கும் ஆறுதல் கொடுக்கும் விதத்தில் ஒரு செய்தி வந்திருக்கிறது.
காக்னிசன்ட் நிறுவனம் இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் வேலை கொடுக்கும் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது. காக்னிசன்ட் நிறுவனத்தில் உலகம் முழுக்க சுமார் 2.9 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். அதில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் இந்தியாவில் இருப்பவர்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை, காக்னிசன்ட் நிறுவனத்தின் சி இ ஓ பிரையன் ஹம்ஃப்ரைஸ் அவர்களே (Brian Humphries)ஆமோதித்து இருக்கிறார்.
அதோடு இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியலில், முன்னணி வரிசையில் இடத்தைப் பிடித்து இருக்கிறது காக்னிசன்ட். அக்செஞ்சர் நிறுவனம் இந்தியாவில் சுமார் 1.7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இன்டர்நேஷனல் பிசினஸ் மெசின் (ஐபிஎம்) நிறுவனம் இந்தியாவில் சுமாராக 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. கேப் ஜெமினி என்கிற ஐடி நிறுவனம் இந்தியாவில் 1.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
காக்னிசன்ட் போல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுக்க 4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறதாம். அதில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் இந்தியாவில் இருப்பவர்களுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் போலவே இந்தியாவில் தொடங்கப்பட்டு உலகின் முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம் உலகம் முழுக்க 2.3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. அதில் சுமார் 1.9 லட்சம் வேலைவாய்ப்புகள் நம் இந்தியாவில் இருப்பவர்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.