புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்தே கடுமையான விதிமுறைகள் அபராதம் என வசூல் வேட்டை நடந்தாலும், இன்னும் பலர் விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கிறார்களா என்றால் இல்லை.
இன்றளவிலும் ஒவ்வொரு 10 நிமிடத்திலும், 9 விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம். ஆக எவ்வளவு தான் ஓட்டுனர்கள் மீது விதிமுறைகளை திணித்தாலும், கட்டணங்களை அதிகரித்தாலும் விபத்துகள் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆக இதைத் தடுக்க அரசு தற்போது வித்தியாசமான முடிவினை கையில் எடுத்துள்ளது. இதுவரை போக்குவரத்து விதிமுறைக்கான கட்டணத்துகாக மட்டும் பயந்து கொண்டிருந்த, வாகன ஓட்டிகள் இனி இன்னொரு விஷயத்துக்காகவும் கவலை பட வேண்டியிருக்கும்.
அது நீங்கள் ஒவ்வொரு முறையும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போதும், உங்களின் வாகன பிரிமியம் உயரும் என்பதே.
ஹெச்.டிஎஃப்.சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் மற்றும் தலைமை எழுத்துறுதி அலுவலர் அனுராக் ரஸ்தோகி தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட இந்த குழு, போக்குவரத்து விதிமுறைகளை மீறல்களை, இன்சூரன்ஸ் பிரிமிய செலவுகளுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் போக்குவரத்து விதிமீறல்களுடன் காப்பீட்டு பிரிமியத்தை இணைப்பது, விபத்துகளைக் குறைக்கும் என்றும், மேலும் இது ஓட்டுனர் நடத்தையில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் ஐ.ஆர்.டி.ஏ போக்குவரத்து விதிமுறைகளுடன் பிரிமியங்களை இணைக்கும் முறையை ஆராய ஒரு பணிக்குழுவையும் நியமித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து பாலிசி பஜார் டாட்காமின் தலைமை மோட்டார் இன்சூரன்ஸ் தலைவர் சஜ்ஜா பிரவீன் சவுத்ரி கூறுகையில், பொது இடங்களில் இருக்கும் போது மக்கள் அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்க ஒட்டுமொத்த சூழல் மாற்றப்பட்டு வருகிறது. எனவே நல்ல ஓட்டுனர்கள் நிச்சயமாக குறைந்த பிரிமியத்துக்கு பிரிமீயத்தை செலுத்துவார்கள். இதே மோசமான ஓட்டுனர்கள் அதிக பிரிமியம் செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
தற்போது மோட்டார் காப்பீட்டு பிரிமியங்கள் முதன்மையாக காப்பீட்டு நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால் இனி அவரவர் ஓட்டுனர் நடத்தையை பொறுத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் காப்பீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒரு மென்மையான மற்றும் குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் கொள்முதல் செயல்முறையை வழங்க எதிர்பார்க்கின்றனர்.
தற்போது மோட்டார் காப்பீட்டு வாங்குதலில் 10 சதவிகிதம் ஆன்லைனில் நடக்கிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது 30 - 40 சதவிகிதமாக உயர்ந்து வரலாம் என்றும் கூறப்படுகிறது.