மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சரிதான், ஓலா உபெரால் கார் விற்பனை சரிந்துள்ளது தான். அவர் கூறிய கருத்து உண்மை தான் என்று மாருதி சுசூகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி பார்கவா கூறியுள்ளார்.
அதே போல மற்ற ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் கூறுவது போல ஜி.எஸ்.டியை குறைத்தால் மட்டும் வாகனங்கள் விற்பனை கூடிவிடாது என்றும் அதிரடியாக தனது கருத்தை கூறியுள்ளார்.
ஓலா உபெரால், இந்தியாவில் இளம் தலைமுறையினர் கார் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக புதிய கார் வாங்கி அதற்காக அவர்களின் வருமானத்தில் ஒரு பகுதியை செலவிட அவர்கள் விரும்பவில்லை. மாறாக எலக்ட்ரானிக்ஸ் வாகனங்கள் வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் விலை அதிகரித்திருக்கும் கார்களை அவர்கள் வாங்க விரும்பவில்லை, மேலும் புதிய விதிகள் வரவிருப்பதால், அவை கார்களின் விற்பனையை மேலும் பாதித்துள்ளன என்றும் பார்கவா கூறியுள்ளார்.
வருமானம் குறைவு
இந்தியாவில் ஒரு தனி மனிதனின் வருட வருமானம் 2,200 டாலர் (இந்திய மதிப்பில் 1.56 லட்சம் ரூபாய்), இதே ஐரோப்பாவில் ஒரு தனி மனித வருமானம் 40,000 டாலர், இது சுமார் 18 மடங்கு அதிகம், மேலும் ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் எந்த தர வித்தியாசமும் இல்லை. மாறாக இந்தியாவில், ஐரோப்பாவை விட, ஏன் சீனாவை விட வரி விகிதங்கள் அதிகம். இவ்வளவு தனி நபர் வருமானம் குறைந்த ஒரு நாடு, காருக்காக செலுத்தும் தொகை மட்டும் எப்படி அதிகரிக்கும். அதிலும் வருடத்துக்கு 10- 15% வளர்ச்சி எப்படி இருக்கும் என்றும் கேட்டுள்ளார்.
அனைத்து நிறுவனங்களும் வீழ்ச்சி
நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகியின் பங்கு விலை 2% சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதத்தில் இந்த வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மாருதி மட்டும் அல்ல மற்ற ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களும் இப்படி தான், அதிலும் நடப்பாண்டில் பயணிகள் வாகன விற்பனையானது கால் பங்கு குறைந்துள்ளது. அதே போல் கடந்த 10 மாதங்களாகவே இந்த வீழ்ச்சி காணப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
மொத்த விற்பனையும் வீழ்ச்சி
அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விற்பனை சரிந்துள்ளது. கடந்த இரண்டு சகாப்தங்களாகவே 23.5% சரிந்துள்ளது. அதிலும் வரவிருக்கும் ஏப்ரல் 2020ல் அமல்படுத்தவுள்ள பி.எஸ்.6 விதிகளால், வாடிக்கையாளர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது தெரியாமல் இந்த நிலை மாறபோவதில்லை என்றும் நினைக்கின்றன. இதனால் தற்போதைய நிலையிலிருந்து மீள 28% ஜி.எஸ்.டி விகிதத்தினைப் 18% குறைக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில் வரவிருக்கும் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் ஜி.எஸ்.டி குறித்தான கூட்டத்தொடரில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை, ஹோட்டல்கள், பிஸ்கட்கள், அவுட்டோர் கேட்டரிங் செக்மண்ட்ஸ் உள்ளிட்ட துறைகள் ஜி.எஸ்.டி விகிதத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பெட்ரோல் காருக்கு 20,000 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இதே டீசல் கார்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.