இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருந்ததி பட்டாச்சார்யா தன் நெருங்க நன்பர்களுடன் சேர்ந்து புதிதாக ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்க உள்ளதாக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
வல்லரசு நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்பதை சரியாக உணர்ந்த அருந்ததி பட்டாச்சார்யா இத்துறையில் தன் தலைமையில் புதிய நிறுவனத்தை துவங்கும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.
நண்பர்கள்
இப்புதிய ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அருந்ததி பட்டாச்சார்யா உடன் அமெரிக்கன் இன்சூரர் AIG நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் முன்னாள் தலைவர் சுனில் மேத்தா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் இயக்குனர் தீபக் ஈஷ்வர்பாய் அமின் ஆகியோர் இணைந்து இப்புதிய நிறுவனத்தை துவங்க உள்ளனர்.
வெல்மோ பின்டெக்
செப்டம்பர் 3ஆம் தேதி அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் சுனில் மேத்தா ஆகியோர் இணைந்து வெல்மோ பின்டெக் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சரியான திட்ட வரைமுறைகளோடு இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கான உரிமத்தை பெற இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் தனது விண்ணப்பத்தை சமர்பிக்க உள்ளது இந்த மூவர் கூட்டணி.
ஆர்1, ஆர்2, ஆர்3
இந்தியாவில் புதிய இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்க வேண்டும் என்றால் முதலில் இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையமான IRDAI என்று அழைக்கப்படும் Insurance Regulatory and Development Authority of India அமைப்பிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.
இப்படி புதிய நிறுவனம் துவங்க வேண்டும் என விண்ணப்பிக்கும் அனைத்து நிறுவனங்களையும் IRDAI ஆய்வு செய்து முதல்கட்ட ஆர்1 ஒப்புதலை கொடுக்கும். இதன் பின் ஆர்2, ஆர்3 இருக்கிறது.
100 கோடி ரூபாய்
இந்த நிறுவனத்திற்கு 2வது ஒப்புதலான ஆர்2 கிடைக்க வேண்டும் என்றால் வெல்மோ நிறுவனத்தில் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை காட்ட வேண்டும்.
இந்நிலையில் முதல்கட்ட ஒப்புதல் கிடைத்த உடன் முதலீட்டுக்காக இந்த மூவர் கூட்டணி வென்சர் கேப்பிடல் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.