இந்தியப் பொருளாதார மந்த நிலை ஆட்டோமொபைல் துறையின் விற்பனையில் எதிரொலித்தது தொடங்கி, மக்கள் நுகர்வு வரை எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் நம் தலையெழுத்துக்களை எழுதும் அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ இது புரிந்ததாகத் தெரியவில்லை.
இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் தான் இருக்கிறது என்பதை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் உரக்கச் சொல்லும் விதமாக, அரசின் வருவாய் கணக்குகள் பேசத் தொடங்கி இருக்கின்றன. அரசுக்கு வரும் வரி வருவாய் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அதாவது ஏப்ரல் 01, 2019 முதல் செப்டம்பர் 15, 2019 வரையான காலத்தில் அரசுக்கு கிடைத்து இருக்கும் நேரடி வரி வருவாய் வெறும் 5 % தான் அதிகரித்து இருக்கிறதாம். சுமார் 6 மாத காலத்தில் அரசின் நேரடி வரி வருவாய் வெறும் 4.4 லட்சம் கோடி ரூபாய் தானாம். இதில் மக்களுக்கு கொடுக்க வேண்டிய ரீ ஃபண்ட் மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. என்ன சிக்கல் எனக் கேட்கிறீர்களா..?
மீதம் இருக்கும் ஆறு மாத காலத்துக்குள் சுமார் 9.1 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரியை வசூலித்தால் தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போல 2019 - 20 நிதி ஆண்டுக்குள் 13.5 லட்சம் கோடி ரூபாயைத் திரட்ட முடியும் என எச்சரிக்கை விடுக்கிறார்கள் இந்திய நாட்டுப் பொருளாதாரம் மீது அக்கறை கொண்ட கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள்.
சரி இந்த வரி எப்படி இந்தியப் பொருளாதாரத்தின் சரிவைச் சொல்கிறது எனக் கேட்கிறீர்களா..? இந்தியாவில் வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு வரும் வருமானத்துக்கு ஒவ்வொரு காலாண்டு ஒரு குறிப்பிட்ட அளவு வரியை முன் கூட்டியே செலுத்த வேண்டும். இதற்குப் பெயர் Advance Tax என்பார்கள். இந்த முன் கூட்டியே செலுத்தும் வரியின் அளவு குறைவாக இருக்கிறது என்றால் போதிய வியாபாரம் இல்லை, அதனால் வரியும் குறைவாகச் செலுத்தி இருக்கிறார்கள் என்று தானே பொருள்.
கடந்த 2018 - 19 நிதி ஆண்டின், முதல் அரையாண்டில், முன் கூட்டி செலுத்தும் வரி வருவாய் சுமார் 18 % அதிகரித்து இருந்ததாம். ஆனால் இந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வெறும் 6 சதவிகிதம் தான் அதிகரித்து இருக்கிறதாம். வருமான வரித் துறை வட்டாரங்களிலேயே இந்தியப் பொருளாதார மந்த நிலை, வரி வசூலில் நேரடியாக எதிரொலித்துக் கொண்டு இருப்பதாகப் பேச்சு எழுந்து கொண்டு இருக்கிறதாம்.
எதிர் பார்த்த அளவுக்கு வரி வருவாய் வரவில்லை என்றால்... நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும், ஜிஎஸ்டி வரிகளை மேற் கொண்டு குறைக்கமாட்டார்கள், வழக்கம் போல சந்தையை ஊக்குவிக்க அரசால் எதையும் செய்ய முடியாமல் தவிக்கும். இத்தனையும் இப்போது நடந்து விடுமோ என பயமாக இருக்கிறது.