டெல்லி : மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொதுத்துறை வங்கிகளால், 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுத்துறை வங்கிகள் 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் (Shamiana meetings) நடத்த வேண்டும் என்று, பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் அதிகரிக்கும் பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், செலவுகள் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கடன் முகாம்கள் 2 தவணைகளாக நடத்தப்படும் என்றும், முதலாவது முகாம் அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் அக்டோபர் 7ம் வரையில் 200 மாவட்டங்களில் நடைபெறும் என்றும், இரண்டாவது முகாம் அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை 200 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுள்ளன. அவற்றின் திரும்ப செலுத்தப்படாமல் இழுபறியில் உள்ள கடன்களை, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்றும் பொதுத்துறை வங்கிகளிடம் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், அதை பொதுத்துறை வங்கிகள் பின்பற்ற வேண்டும் கூறியுள்ளார். அதோடு அந்த கடன்களை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபடாலாம் என்றும், இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று நடக்கவுள்ள ஜி.எஸ்.டி குறித்தான கூட்டத்தில், ஜி.எஸ்.டி குறித்தான முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.