தீபாவளி, தசரா பண்டிகை இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுபவை. இப்பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தெலுங்கானாவில் ஒரு அரசு நிறுவனம் தன் ஊழியர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு 1.01 லட்சம் ரூபாயை போனஸாகக் கொடுத்துள்ளது.
அரசு நிறுவனம்
ஆந்திராவில் இருந்து தனியாகப் பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கிவரும் Singareni Collieries என்ற நிலக்கரி உற்பத்தி நிறுவனம் 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 1,765 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது.
இதைக் கொண்டாடும் வகையிலும், தசரா பண்டிகையை முன்னிட்டு இந்நிறுவன ஊழியர்களுக்கு 1.01 லட்சம் ரூபாய் தொகையைப் போனஸாகக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
சந்திரசேகர ராவ்
கடந்த 5 வருடத்தில் Singareni Collieries நிறுவன ஊழியர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து உழைத்து மாநிலத்தின் கஜானாவை நிரப்பியுள்ளனர். வருவாய்க் கொடுத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்நிறுவன ஊழியர்களின் உழைப்பு நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் போராடும் வீரர்களின் பணிக்குச் சமம் என்று தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கேசிஆர் எனச் செல்லமாக அழைக்கப்படும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு
தசரா பண்டிகையை முன்னிட்டுக் கொடுக்கப்படும் இந்தப் போனஸ் தொகையை மாநில அரசு தான் இந்நிறுவன ஊழியர்களுக்கு நேரடியாகக் கொடுத்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த வருடம் 40000 ரூபாய் அதிகமான போனஸ் தொகையைக் கொடுத்துள்ளது தெலுங்கானா மாநிலம்.
வருவாய்
Singareni Collieries நிறுவனத்தின் வருவாய் கடந்த வருடத்தை விடவும் 28 சதவீதம் வளர்ச்சி அடைந்து சுமார் 1,765 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
இதற்கு நன்றி கூறும் வகையில் ஒவ்வொரு ஊழியருக்கும் அரசின் சார்பில் 1,00,899 ரூபாய் தொகையைப் போனஸாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 40,530 ரூபாய் அதிகம்.
மேலும் இந்த நிறுவனத்தில் 48000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.