டெல்லி : மத்தியில் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே, தொடர்ச்சியாக பொருளாதார வீழ்ச்சி, உற்பத்தி வீழ்ச்சி, என அதனை தொடர்ந்து பல துறைகள் வீழ்ச்சி, வேலையிழப்பு, வேலையின்மை என பல பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் இது வரை மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இது எதற்காகவும் மசியாத இந்திய சந்தைகள், கடந்த வெள்ளிக்கிழமையன்று, வட்டியும் முதலுமாக ஒரே நாளில் ஏற்றம் கண்டது.
எனினும் செப்டம்பர் மாதத்தில் இதுவரை, இந்திய கேப்பிட்டல் சந்தையில் இருந்து, 4,193 கோடி ரூபாயை வெளியேற்றியுள்ளனர்.
இதுவரை அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி இருந்தாலும், இனி அதெல்லாம் திரும்ப வரலாம் என்றும், ஏனெனில் அரசின் துரிதமான நடவடிக்கைகளால் முதலீடுகள் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று கார்ப்பரேட் வரி விகிதங்கள், சுமார் 10% குறைத்துள்ளது மத்திய அரசு. அதிலும் ஏற்கனவே உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு 22% எனவும், இது கூடுதல் கட்டணங்களுடன் சேர்த்து 25% எனவும், இதே புதியதாக ஆரம்பிக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரி என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது குறைந்து வரும் முதலீடுகளை ஊக்குவிக்கவும், கார்ப்பரேட்களின் வருவாயை அதிகரிக்கவும், தேவையை அதிகரிக்கவும், இதுதவிர அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த முதலீட்டாளர்கள் குறித்த அறிக்கையின் படி, ஈக்விட்டி சந்தைகளில் இருந்து இதுவரை 5,577.99 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியதாகவும், இதே கடன் துறையில் 1,384.81 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக மொத்தம் செப்டம்பர் 3 முதல், 20 வரையிலான காலத்தில் 4,193.18 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அன்னிய முதலீடுகள் 5,920.02 கோடி ரூபாய் வெளியேறியுள்ளதாகவும், இதே ஜூலை மாதத்தில் 2,985.88 கோடி ரூபாய் வெளியேறியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மெலிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று எடுக்கப்பட்ட மத்திய அரசின் முக்கிய நடவடிக்கையானது, புதிய கார்ப்பரேட் நிறுவங்களுக்கு ஊக்குவிப்பு அளிப்பதோடு, முன்னரே உள்ள நிறுவனங்களின் வருவாயும் அதிகரிக்கும் என்றும், இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையானது வளர்ச்சியை மேம்படுத்த உதவுவதோடு, முதலீடுகளையும் ஊக்குவிக்கும் என்றும் தனியார் புரோக்கிங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.