டெல்லி : கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5% சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 - 7.5% ஆக இருக்கும் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
முதல் இரண்டு காலாண்டிலும் தரைமட்டத்திலிருந்த ஜி.டிபி விகிதமானது, மூன்றாவது மற்றும் நான்காவாது காலாண்டுகளில் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசியவர் மத்திய அரசு முதலீடுகளை அதிகரிக்கவும், வருவாயை கூட்டவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் அரசின் இந்த நடவடிக்கைகள் நிச்சயம் அடுத்து வரும் காலாண்டுகளில் கைகொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக, இந்த நடவடிக்கையானது, உள்நாட்டு பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், அன்னிய முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்றும், முதலீடுகளும் அதிகரிக்கும் என்றுக் கூறியவர், இதன் மூலம் அரசுக்கு பலத்த அடி என்றாலும், உற்பத்தி துறையை வளர்ச்சியை மேம்படுத்த அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும், மேலும் இந்த பற்றாக்குறையை போக்க அரசு 24 நிறுவனங்களில் உள்ள, 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விலக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
ஆக அரசின் இந்த நடவடிக்கையால் அரசுக்கு வரி வருவாய் மேம்படும் என்றும், முதலீட்டு வருவாயும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு 24 பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 52,000 கோடி ரூபாய் நிதியினை திரட்டவும் முடிவு செய்துள்ளது என்றும் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரலுடன் முடிவடைந்த காலாண்டில் முதலீடு, உற்பத்தி துறை வளர்ச்சி, குறைந்த தேவை, தனியார் முதலீடுகள் என அனைத்தும் வீழ்ச்சி கண்டும் காணப்பட்டன. எனினும் வரும் காலாண்டுகளில் அரசின் முக்கிய நடவடிக்கைகளால் இந்த வளர்ச்சிகளானது மேம்படும் என்றும், குறிப்பாக முதலீடுகளும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் முதல் பாதியில் போன்று அல்லாமல், தற்போது இந்தியா சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சீனாவைவிட விட இந்தியா வளர்ச்சியில், அடுத்து வரும் காலாண்டுகளில் மிஞ்சலாம் என்றும் குமார் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்ற குறியீட்டை இழந்தது. எனினும் அடுத்து வரும் காலாண்டுகளில் கார்ப்பரேட் வரி குறைப்பானது, இதை மாற்ற கைகொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.