தலைப்பை படித்த உடன் ஷாக் ஆக வேண்டாம். 599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 4 லட்சம் ரூபாய்க்கு ஒரு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி கொடுப்பார்களாம்.
அந்த 4 லட்சம் ரூபாயை நாம் பெற வேண்டும் என்றால், நம் உயிர் நம்மிடம் இருக்கக் கூடாது. அட நாம் செத்தா தாங்க அந்த 4 லட்சம் ரூபாயைக் கொடுப்பாங்க.
அப்படி என்ன வில்லங்கமான திட்டம்..? என்ன ஏது என்று பார்த்து விடுவோமா..? வாருங்கள் ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டத்தில் இருந்தே தொடங்குவோம்.
திட்டம்
டெலிகாம் ஆபரேட்டர் பாரதி ஏர்டெல் ஒரு புதிய 599 ரூபாய் ப்ரீபெய்ட் கட்டண திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர்டெல்லின் இந்த 599 ரூபாய் ப்ரி பெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கு இன்சூரன்ஸ் பாலிசியும் கூடுதலாக வழங்க இருக்கிறார்களாம்.
வேலிடிட்டி
இந்த 599 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகுமாம். மேலும் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இன்சூரன்ஸ் பாலிசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தானாகவே ரெனிவ் ஆகும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் இது படிப்படியாக அடுத்த சில மாதங்களில் இந்திய நாட்டின் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனச் சொல்லி இருக்கிறது பார்தி ஏர்டெல்.
கூட்டு நிறுவனம்
இதற்காக பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் ஒரு தனி கூட்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்களாம். இந்த பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாரதி ஏர்டெல் 51 % பங்குகளையும், பிரான்ஸ் பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனமான ஆக்ஸா 49 % பங்குகளையும் வைத்து இருக்கிறார்களாம். இன்சூரன்ஸ் இல்லாத இந்தியர்கள், தங்கள் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி கொடுக்கும் நோக்கத்தில் களம் இறங்கி இருக்கிறது பார்தி ஏர்டெல்.
டிஜிட்டல் தான்
லைஃப் இன்சூரன்ஸ் தொடர்பான அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுமாம். முதல் முறையாக பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸில் பதிவு செய்து கொள்ளும் போது, வாடிக்கையாளர் முதலில் எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் செயலி அல்லது ஏர்டெல் சில்லறை விற்பனையாளர் மையம் மூலம் ரீசார்ஜ் செய்த பின் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
யாருக்கு எல்லாம்
பார்தி ஏர்டெல் வழியாக, பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில்
18 - 54 வயதுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 4 லட்சம் ரூபாய் கவரேஜ் தொகை உடன் ஒரு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள முடியுமாம். ஏர்டெல்லின் இந்த லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு எந்த ஒரு காகிதப் பணியும் தேவை இல்லை. குறிப்பாக மருத்துவ பரிசோதனை கூட தேவை இல்லையாம். பாலிசி சான்றிதழ் கூட டிஜிட்டல் வழியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப் படுமாம். லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி சார்ந்த விவரங்களைக் ஏர்டெல்லிடம் கேட்டால் மட்டும், ஒரு பாலிசி விவரங்கள் (Physical Copy) நம் வீட்டுக்கே வருமாம்.