இந்தியாவின் 4 முக்கிய வங்கி ஊழியர்கள் அமைப்பு செப்டம்பர் 26-27 ஆகிய இரு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படப் போவதாக அறிவித்தது. இதனால் செப்டம்பர் 26-27ஆகிய இரு நாட்களைத் தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பில் சில சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர்களுக்கும், வங்கி அமைப்புகளும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 30ஆம் தேதி 10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத்துறை வங்கிகள் ஆக இணைக்க முன்வைத்த திட்டத்தை எதிர்த்துத் தான் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புக்கு இந்தியாவின் 4 முக்கிய வங்கி ஊழியர்கள் அமைப்பும் இணைந்த நிலையில் வங்கி சேவைகள் பெரிய அளவில் பாதிக்கும் என்பதை மக்கள் மட்டும் அல்லாமல் மத்திய அரசும் உணர்ந்தது.
இரண்டு அரசு பொதுத் துறை வங்கிகளின் நிதி அறிக்கைகளை ஒன்றிணைத்து விட்டால் பிரச்சனைகள் தீரும் என்று நினைப்பது தவறு என்று மத்திய நிதியமைச்சகத்திற்கு வங்கி ஊழியர்கள் அமைப்பு விளக்கம் அளித்துத் தனது எதிர்ப்பை வலிமையாக முன்வைத்தது.
அதோடு அரசு பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பது அல்லது இணைக்கும் திட்டங்களைக் கைவிட வில்லை என்றால் வரும் நவம்பர் மாதத்திலிருந்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் வங்கி யூனியன் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதோடு வங்கி அதிகாரிகளுக்கு, வாரத்திற்கு ஐந்து நாள் வேலை, சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளையும் இந்த வேலை நிறுத்த அறிவிப்புகளுடன் சேர்த்து முன் வைத்து இந்தப் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில் வங்கி அமைப்புகளுடன் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இருதரப்பினர் மத்தியிலும் சமரசம் செய்யப்பட்டுத் தற்காலிகமாக வங்கி ஊழியர்கள் அமைப்புகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.
மேலும் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் தீர்வு காண்பதாகவும் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக வங்கி ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.