டெல்லி : இதுவரை விற்பனை மந்தம், பொருளாதார சரிவு, வேலையிழப்பு என்று மட்டும் கூறி வந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஜிஎஸ்டி விகிதத்தை குறைத்தாலாவது விற்பனை அதகரிக்கும் என்றும் கூறி வந்தன. அந்த ஓட்டுமொத்த நம்பிக்கைக்கும் கடந்த வாரம் ஆப்பு வைத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் 28% ஜிஎஸ்டி விகிதத்தினை, 18% குறைக்க வேண்டும் என்று பலதரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தினை 30%லிருந்து 22%மாகவும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரியும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் மாற்றியமைத்தார்.
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயன் இல்லை
இது வாகன துறைக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்றும் தெரியவில்லை. புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களே இங்கு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில் புதிய நிறுவனங்கள் வந்தால் விரைவில், இழுத்து மூடிவிட்டு போக வேண்டியது தான் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. அதிலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரி விகிதத்தினை குறைக்காமல் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைகொடுத்துள்ளது. ஆனால் மொத்த வளர்ச்சியில் அதிகளவு பங்கு கொள்ளும் எங்களை விட்டுவிட்டது என்றும் எம்.எஸ்.எம்.இ துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாத விற்பனை அதிகரிக்கும்
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், கடந்த ஆகஸ்ட் மாதத்தினை விட, செப்டம்பர் மாதத்தில் விற்பனை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. அதிலும் வரவிருக்கும் செப்டம்பர் 29 - 30 விற்பனை இன்னும் வெகுவாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளது. அதே போல சில்லறை விற்பனையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.
புதிய வாகனங்களுக்கான பதிவு அதிகரிப்பு
இது குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி பார்கவா கூறுகையில், புதிய வாகனங்களுக்கான பதிவு கடந்த மாதத்தினை விட தற்போது அதிகரித்துள்ளதாகவும், ஆக வருகிற செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளில் சில்லறை விற்பனையும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் செப்டம்பர் நவராத்திரி திருநாளின் முதல் நாள் என்றும், இதனால் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
முந்தைய மாதங்களில் விற்பனை சரிவு
அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையானது 36% வீழ்ச்சி கண்டதாக கூறப்பட்ட நிலையில், வெறும் 93,713 வாகனங்கள் மட்டுமே விற்பனையானதாகவும் கூறப்பட்டது. இதில் கொடுமை என்னவெனில் தொடர் இதற்கு முந்தைய மாதத்திலும் வாகன விற்பனையானது 1 லட்சத்துக்கும் கீழ் மட்டுமே விற்பனையாகியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விலை குறைப்பு வேண்டுமா?
இந்த நிலையில் மும்பையில் நடந்த இந்தியா டுடே கான்க்ளேவ் 2019ல் கலந்து கொண்ட மாருதி நிறுவன தலைவர், மாருதி சுசூகி வாகன விலை குறைப்பு பற்றி பேசியவர், ஏற்கனவே விற்பனை மந்தம் காரணமாக வாகனங்களின் விலை போதிய அளவுக்கு குறைத்தாயிற்று என்றும், மீண்டும் விலை குறைப்பு வேண்டுமாயின் மக்கள் அதற்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்ததார்.
விலையை குறைக்க கோரிக்கை
இதே கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்தும் கலந்து கொண்டார். அவர் மிக தளர்ந்து போயுள்ள வாகன துறையை ஊக்குவிக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் வாகன உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே பல வாகனங்கள் விற்பனை மந்தம் காரணமாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் விலைகுறைப்பு எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தான் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.