டெல்லி: இந்தியாவில் ஓடும் கார் மற்றும் வணிக வாகனங்கள் வாயிலாக ஏற்படும் மாசை கட்டுப்படுத்தும் விதமாகவும், பழைய வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாகவும் ஒரு புதிய விதிமுறையை, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வரப் போகிறதாம்.
அது தான் வாகனங்களுக்கான மறு பதிவுக் கட்டணம் உயர்வு. இந்த புதிய மறு கட்டணப் பதிவு அநேகமாக வரும் ஜூலை 2020 முதல் அமலுக்குக் கொண்டு வர இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.
Voluntary Vehicle Scrappage Policy என்கிற பெயரில் கொண்டு வரப்படும் திட்டங்களில், 15 வருட பழைய வாகனங்கள் பயன்பாட்டை குறைப்பதைத் தான் முதல் கொள்கையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம். தற்போதைக்கு இந்த கொள்கை குறித்து அமைச்சரவைகளில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இதுவரை இந்த கொள்கை விவரங்கள் பொது வெளியில் வரவில்லையாம். அவ்வளவு ஏன் இன்னும் கேபினெட் அனுமதி கூட வாங்கவில்லையாம்.
ஆனால் விரைவில் அனைத்து வேலைகளையும் முடித்து, கேபினெட் அப்ரூவல் வாங்கி, பொது வெளியில் விடப்படும் எனவும் சொல்கிறார்கள் விவரம் தெரிந்த அதிகாரிகள். இந்த புதிய கொள்கையால் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை மேம்படும் எனவும் நம்புகிறது அரசு. இந்த கொள்கைகளில் பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது வாகனங்கள் மறு பதிவு செய்து கொள்வதற்கான கட்டணங்கள் தான். தனியார் நான்கு சக்கர வாகனங்கள் மறு பதிவு செய்ய இப்போது 600 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய நடைமுறைகள் படி 15,000 ரூபாய் வரை வசூலிக்க இருக்கிறார்களாம்.
அதே போல வணிக ரீதியிலான நான்கு சக்கர வாகனங்களுக்கு இப்போது மறு பதிவு செய்ய 1,000 ரூபாய் தான் கட்டணம். ஆனால் புதிய கொள்கைகள் படி 20,000 ரூபாய் வசூலிக்க இருக்கிறார்களாம்.
மீடியம் கண ரக வாகனங்களுக்கு இப்போது மறு பதிவு செய்ய 1,500 ரூபாய் தான் கட்டணம். ஆனால் புதிய கொள்கைகள் படி 40,000 ரூபாய் வசூலிக்க இருக்கிறார்களாம். ஒருவேளை, வாகனம் பதிவு செய்து 15 வருடங்களுக்குப் பிறகு, இவ்வளவு பெரிய தொகையைக் கட்டி பதிவு செய்யவில்லை என்றால், அந்த வாகனங்கள் தானாகவே வாகன பதிவேட்டில் இருந்து நீக்கப்படுமாம்.