இந்திய பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருக்கிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி ஜியோவிற்கு முன் பின் என்று பிரித்துச் சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜியோ வர்த்தகத்திற்காக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகளவிலான கடனை வாங்கியது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த கடன் அளவு எப்போது இல்லாத வகையில் 1.54 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த 5 வருடங்களாக ரீடைல் மற்றும் டெலிகாம் வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிற வர்த்தகங்களில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஜியோவை விடப் பிற வர்த்தகத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மற்றும் லாபம் தான் அதிகம்.
இதை உணர்ந்துக்கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2021ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் மொத்த கடனையும் தீர்த்துவிட்டு அதாவது தற்போது கணக்கிடப்படும் 1.54 லட்சம் கோடி ரூபாய் கடனை தீர்த்து விட்டு கெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் இதுவரை செய்திடாத வகையில் அதிகமான தொகையை முதலீடு செய்ய முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளது.
இப்புதிய முதலீட்டு திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு, கெமிக்கல் மற்றும் டெக்ஸ்டைல் பிரிவில் இருந்து அதிக லாபம் கிடைக்கும். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கும் இப்புதிய முதலீட்டுத் திட்டம் பெரிய அளவில் பயன்படும் எனத் தெரிகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அஸ்திவாரமான பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகப் பிரிவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு உள்ளார். இதுநாள் வரையில் முகேஷ் அம்பானி தான் இருக்கும் துறையிலும், நிறுவனத்திலும் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக அன்னிய நிறுவனத்திற்கு வழி விட்டுள்ளார்.
சவுதி ஆராம்கோ முதலீடும் செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தின் மதிப்பு 75 பில்லியன் டாலர். இது இப்பிரிவின் கடன் நிலுவையும் சேர்த்து மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆராம்கோ வாங்கும் 20 சதவீத பங்குகளின் மதிப்பு 15 பில்லியன் டாலர்.
மற்றொரு புறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ரீடைல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை அதிகரிக்கப் பிரிட்டன் BP நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
இக்கூட்டணி புதிய நிறுவனத்தைத் துவங்கி அதன் கீழ் இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்குகளைத் திறக்கவும், இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்களுக்குச் சில்லறை விற்பனை முறையில் விமான எரிபொருளை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது. இக்கூட்டணி நிறுவனம் அடுத்த 5 வருடத்தில் நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் சுமார் 5500 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட உள்ளது.
இவ்விரு முடிவுகளும் அடுத்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் பெட்ரோலிய வர்த்தகத்தைத் தலைகீழாக மாற்றப்போகிறது.