டெல்லி : திருவிழா காலம் என்றாலே சில்லறை விற்பனை படுஜோராக இருக்கும், அதிலும் குடும்பத்துடன் சென்று வாங்குவதில் அப்படி ஒர் ஆர்வம் இருக்கும். அதிலும் ஒன்றுக்கு பத்தாக, பார்த்து பார்த்து பொருட்களை வாங்குவதில் அப்படி ஒரு அலாதி பிரியம் இருக்கும்.
ஆனால் ஸ்மார்ட்போன் என்று பரவலாக பரவ ஆரம்பித்தோ அன்றிலிருந்தே, இந்த ஆன்லைன் கலாச்சாரம் தலையெடுக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் 6 நாட்கள் மட்டுமே, இந்த பண்டிகை கால விற்பனையை அறிவித்துள்ள நிலையில், இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஸ்னாப்டீல் 8 நாட்களுக்கு தனது பண்டிகை விற்பனையை அதிகரித்து அறிவித்துள்ளது.
3 மெகா விற்பனை விழா
இதெல்லாவற்றையும் விட மூன்று அதிரடி திருவிழா கால விற்பனையையும் திட்டமிட்டுள்ளது. அதிலும் முதல் விற்பனை திருவிழா, நவராத்திரி தொடங்கும் நாளில் செப்டம்பர் 29ல் தொடங்கி, அக்டோபர் 6 வரை நடக்கவுள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இரண்டாவது வாரத்தில் மற்றும் மூன்றாவது வாரத்தில் மேலும் இரண்டாவது விற்பனை விழா இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக வரவிருக்கும் தீபாவளி சீசனில் 85% விற்பனையானது மெட்ரோ அல்லாத நகரங்களில் இருந்து வரலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அசத்தலான தள்ளுபடிகள்
இந்த விற்பனையானது தீபாவளி மற்றும் நவராத்திரி மற்றும் பூஜை பொருட்கள், பரிசு பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், லைட்டிங் பொருட்கள் என அனைத்தும் சிறந்த தள்ளுபடிகளிலும், அதிகளவிலான மாடல்களிலும், மக்களுக்கு ஏற்றாற்போலவும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது போலவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பி.என்.பி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு உடனடி 25% தள்ளுபடிகள் என பல சலுகைகளையும் அறிவித்துள்ளது ஸ்னாப்டீல்.
விற்பனை அதிகரிக்கும்
மேலும் ஸ்னாப்டீலை பொறுத்தவரை இந்த ஆண்டின் விற்பனையானது டயர் 2 மற்றும் டயர் 3 சந்தைகளில் இருக்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் இது சில்லறை வர்த்தகத்தை விரைவில் வளர்ந்து வர உதவும் என்றும், இந்த ஸ்னாப்டீல் வர்த்தகத்தை பொறுத்தவரை, இத்தளத்துடன் தொடர்புடைய அனைத்து விற்பனையாளர்களுக்கும் இது நேரிடையாக லாபத்தை கொடுக்கும் என்றும், இது அதன் சந்தையில் சுமார் 5,00,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது என்றும் ஸ்னாப்டீல் அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் போட்டி
ஆன்லைன் விற்பனையில் ஜாம்பவான் ஆன அமேசான் மற்றும் பிளிப்கார்டும் இதே நாளில் இந்த விழாகால சலுகைகளை கொடுத்துள்ள நிலையில், ஸ்னாப்டீலும் இதே போல கொடுத்திருந்தாலும், மற்ற நிறுவனங்கள் ஆறு நாட்கள் மட்டுமே சலுகை கொடுத்திருக்கும் நிலையில், ஸ்னாப்டீல் மட்டும் எட்டு நாட்களுக்கு இந்த சலுகையை கொடுத்துள்ளது. இது ஒரு புறம் எனில், மறுபுறம் ஏற்கனவே இந்த ஆன்லைன் விற்பனையால் பாதிக்கப்பட்டுள்ள நேரடி சில்லறை வியபாரிகளுக்கு, இந்த ஆன்லைன் அதிரடி விழாக்கால சலுகையால், இது இன்னும் விற்பனை பாதிக்கும் என்பதும் உண்மை.