இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, நாம் நினைத்ததை விட வேகமாக அதிகரித்து வருகிறது. 31 மார்ச் 2019 நிலவரப்படி இந்தியாவில் 451 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்தி இருந்தார்கள். ஆனால் சீனாவிலோ அதே மார்ச் 2019-ல் 800 மில்லியன் பேர் இணையப் பயனர்களாக இருந்திருக்கிறார்கள். ஆக உலகின் அதிக இணையப் பயனர்கள் பட்டியலில், இந்தியா சீனாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ளது என IAMAI (Internet and Mobile Association of India) என்கிற அமைப்பு கணக்கெடுத்துச் சொல்லி இருக்கிறது.
IAMAI அமைப்பு, நீல்சன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தான் 'இந்தியா இன்டர்நெட் 2019' என்கிற அறிக்கையைத் தயாரித்து இருக்கிறது. இந்தியாவில் 451 மில்லியன் பயனர்களில், 385 மில்லியன் பேர் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரைச் சேர்ந்தவர்களாம். இதில் ஆச்சர்யமான இன்னொரு செய்தி என்ன என்றால், 451 மில்லியன் இணையப் பயனாளர்களில் 66 மில்லியன் பேர் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது கவனிக்கத்தக்கது. ஆக இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் அதிகம் இணையத்தை பயன்படுத்துவதாகச் சொல்கிறது இந்த அறிக்கை.
அதோடு இந்த குழந்தைகள் தங்கள் இணையப் பயன்பாட்டுக்கு, தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களையே பெரிதும் நம்பி இருப்பதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் ஊடுருவல் மற்றும் இந்தியா முழுவதும் மலிவு விலையில் 4 ஜி சேவைகள் கிடைக்கிறது. இருப்பினும் இந்திய பெண்கள் அதிகம் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை எனச் சொல்கிறது IAMAI அறிக்கை. இந்திய கிராம புறங்களில், 28 % பெண் பயனர்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துவதாகச் சொல்கிறது IAMAI அறிக்கை.
ஒட்டு மொத்த இந்தியாவில், 36 சதவிகிதத்தினர் மட்டுமே இன்றும் இணையத்தை பயன்படுத்துவதாகச் சொல்கிறது IAMAI. அதோடு இந்திய கிராம புறங்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களில், 33 சதவிகிதத்தினர்கள், நாள் ஒன்றுக்கு சுமார் 1 மணி நேரம் இணையத்தை பயன்படுத்துவதாகச் சொல்கிறது அறிக்கை.