டெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இன்னும் சில நாட்களே உள்ளன.
ஏற்கனவே பல முறை இந்த நீட்டிப்பு இருந்த நிலையில் இந்த முறையும் நீட்டிப்பு இருக்குமா? என்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் மத்திய அரசு அவ்வாறு செப்டம்பர் 30க்குள் இணைக்கப்படவில்லை எனில் அக்டோபர் 1லிருந்து உங்களது பான் எண் செல்லாது என்றும் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.
இதன் படி உங்கள் பான் செயல்படாது எனில் உங்களால் எந்த முறையான நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஜூலை மாதம் முன் வைக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தில் ஆதார் - பான் எண் இனைப்பு பற்றிய விதிகளை அரசு மாற்றியது.
மத்திய நேரடி வரிகள் வாரியமும் (CBDT), ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2016-17ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அறிவுறுத்தியது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த சட்டத்தின் படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டது. எனினும் இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால், பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க முதலில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின், மார்ச் 31, 2019 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இறுதியாக தற்போது செப்டம்பர் 30 வரை மட்டுமே கடைசி தேதி என்றும் அறிவித்திருந்தது. மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்புறம் என்ன இன்னும் நீங்க பான் ஆதாரை இணைக்கவில்லையா, முதல்ல போய் அதை செய்யுங்க..