டெல்லி : கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதிலும் ஆரம்பத்தில் 20- 30 ரூபாய்க்கு இருந்த வெங்காயத்தின் விலை, தற்போது 70- 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம பரவலாக பெய்யும் மழையால், வெங்காய பயிர்கள் அழுகியதால், வெங்காயத்தின் உற்பத்தி குறைந்துள்ளது, இதனால் தான் இந்த விலை ஏற்றம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரம் வெங்காயம் விலையேற்றத்திற்கு இன்னொரு காரணமும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் மொத்த வெங்காய உற்பத்தியில் 30 சதவிகிதம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நடக்கிறது. இங்கு தான் தெற்காசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லசல்கான் உள்ளது.
நீடித்த மழை
மஹாராஷ்டிரா, கர்நாடாகா, குஜராத், பீகார் மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதில் குறிப்பிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெங்காய பயிர்கள் அழுகி விட்டன என்றும் கூறப்படுகிறது. மறுபுறம் தொடரும் மழையால் பயிரிடப்பட்டதே தாமதம் என்றும், இதனால் அறுவடைக்கும் தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.
விலை அதிகரிப்பு
பொதுவாக தமிழகத்தினை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோ 20- 30 ரூபாய்க்கு என்ற நிலையில் வர்த்தமாகி வந்த வெங்காயம், செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்தே விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தற்போது கிலோ 70 - 90 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. மேலும் நாசிக் மாவட்டத்தில் 23,000 ஹெக்டேர் காரீப் மற்றும் தாமதமாக காரீப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன என்றும், இதனால் வெங்காயத்தின் வரத்தும் தற்போதைக்கு குறையும் என்றும் கூறப்படுகிறது. இதனால் விலை தொடர்ந்து தற்போதைக்கு அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் மழை அதிகரிக்கும்
ஏற்கனவே அதிகளவு மழையினால் வெங்காயம் விலை அதிகரித்துள்ள நிலையில், இப்பகுதிகளில் மேலும் கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி இன்னும் குறையும் என்றும் கூறப்படுகிறது. எனினும் மீதமிருக்கும் வெங்காய வரத்துகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த மாத பிற்பகுதியில் இந்த விலை நிலவரம் சீரடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியும் ஒரு காரணம் உண்டு?
வெங்காயத்தின் விலை அதிகரிப்புக்கு தொடர் மழை தான் காரணம் என்று கூறப்பட்டாலும், மறுபுறம் அரசியல் தலையீடுகளும் காரணம் என்றும், பெரிய அளவிலான வெங்காயம் பதுக்கல்களும் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய உணவு துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய அரசிடம் போதுமான அளவு வெங்காயம் இருப்பு உள்ளது என்றும், தேவையான மாநிலங்கள் மத்திய அரசிடம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஏற்கனவே திரிபுரா, ஆந்திரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு தேவையான அளவு வெங்காயம் அனுப்பபட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
விலை உயர்வை கட்டுக்குள் நடவடிக்கை
மேலும் உள்நாட்டு சந்தையில் வரத்தை அதிகரிக்கவும், வெங்காயத்தின் விலை மேலும் உயர்வதை குறைக்கவும், மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பதுக்கல்களுக்கும் கட்டுபாடுகள் விதிகப்படுவது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விலை விகிதமானது பண்டிகை சீசனுக்குள் கட்டுகுள் கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.