டெல்லி : யார் சொன்னது தேவை குறைந்துள்ளது, விற்பனை மந்தம் என்றும், எங்களது நிறுவனங்கள் தற்போது தான் விற்பனையில் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளன. இந்த நிலையில் எங்களுக்கு எந்த விற்பனை மந்தமும் இருப்பதாக தெரியவில்லை என்றும் ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்களான அமேசானும், பிளிப்கார்ட்டும் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை மாறி மாறி வழங்கி வருகின்றன.
அதிலும் இவ்விரு நிறுவனங்களும் இந்த விழாக்கால பருவ விற்பனையில் அதிகளவு விற்பனை செய்யும் என்றும், குறிப்பாக செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 29 வரை 4.8 பில்லியன் டாலர் விற்பனை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளன.
இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, நுகர்வு குறைவு உள்ளிட்ட பிரச்சனைகள், தங்களுக்கு இல்லை என்றும் இந்த ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்கள் கூறியுள்ளன.
அதிலும் இதில் 80 சதவிகித விற்பனையானது, இவ்விரு நிறுவனங்கள் அறிவித்துள்ள பிக் பில்லியன் டே நடக்கவிருக்கும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 உள்ளிட்ட நாட்களில் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த பிக் பில்லியன் டே விற்பனையானது, இந்தியாவின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளியை குறிவைத்து இருப்பதால், விற்பனை மிக நன்றாக இருக்கும் என்றும், சர்வதேச ஆய்வு நிறுவனமான ஃபார்ரெஸ்டர் கூறியுள்ளது.
எனினும் இந்த ஆன்லைன் விற்பனை வளர்ச்சியானது கடந்த 2018ல் ஐந்து நாட்களில் 93 சதவிகிதமாக இருந்தது என்றும், இது 2019ல் 32 சதவிகிதமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்த வளர்ச்சியானது, இந்த நிதியாண்டில் மிக அபரிமிதமாக இருக்கும் என்றும், அதிலும் டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களில் மட்டும் அல்லாது டயர் 3 நகரத்திலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக டயர் 3 நகரங்களில் இருந்து இந்த விழாக்கால பருவத்தில் அதிகளவு விற்பனையாகும் என்றும் ஃபார்ரெஸ்டர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் சதிஷ் மீனா கூறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பண்டிகைகால பருவத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையானது 36 சதவிகிதம் பங்கு வகித்து வருகிறது. இதே பேஷன் சம்பந்தமான விற்பனை 24 சதவிகிதமாக இருக்கும் என்றும், அதோடு இந்த பண்டிகை காலத்தில் பேஷனுக்கு பதிலாக, ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் என அனைத்தும் களைகட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களும் தங்களது விற்பனையை அதிகரிக்க, போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. முன்னதாக சில்லறை வர்த்தகர்களுக்கும் ஆன்லைன் வர்த்தகர்களுக்கும் மட்டுமே போட்டி போட்டு வந்த நிலையில், தற்போது ஆன்லைன் சில்லறை நிறுவனங்களுக்கு இடையே போட்டிகள் வலுவாக உள்ளன. இந்த நிலையில் இந்த அங்காளி பங்காளி சண்டையில் யார் ஜெயிப்பார்கள் என்பது தான் தெரியவில்லை.