லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் இன்று பிஎஸ்இயில் 5% சரிந்து 35.55 ரூபாய் என்கிற லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதோடு தன் டவுன் சர்க்யூட் விலையையும் தொட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு என்ன காரணம் எனக் கேட்கிறீர்களா..?
டெல்லியின் பொருளாதார குற்றப்பிரிவினர் லட்சுமி விலாஸ் வங்கி இயக்குநர்கள் மீது மோசடி செய்தது, குற்றவியல் விதிகள் படி நம்பிக்கையை மீறுதல், குற்றவியல் நடைமுறைகள் படி முறைகேடு மற்றும் கிரிமினல் சதித் திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளைச் சொல்லி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இருக்கிறார்களாம். இதனால் தான் லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகள் தரை தட்டிக் கொண்டு இருக்கின்றன.
இந்த வழக்குப் பிரச்னை வெளி வந்த உடன், லட்சுமி விலாஸில் பணத்தைப் போட்டு இருக்கும் டெபாசிட்தாரர்கள் மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளில் பணத்தை முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்களாம். லட்சுமி விலாஸ் வங்கிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பொருளாதார குற்றப் பிரிவினர் தாக்கல் செய்திருப்பதை வங்கி நிர்வாகமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
ரெலிகேர் ஃபின்வெஸ்ட் என்கிற நிறுவனம், தங்கள் டெபாசிட் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் தான் பொருளாதார குற்றப் பிரிவினர், களம் இறங்கி விசாரித்து, தங்கள் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்து இருக்கிறார்களாம். இதை எதிர்கொள்ள லட்சுமி விலாஸ் வங்கி தரப்பினர் தகுந்த சட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த 2019-ம் ஆண்டில் மட்டும், இது நாள் வரை லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகளின் விலை சுமார் 58% வரை சரிந்து இருக்கிறதாம். லட்சுமி விலாஸ் வங்கி பங்கு, கடந்த 30 ஜூன் 2017 அன்று தன் வாழ் நாள் உச்சமான 186.32 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அதற்குப் பின் தொடர்ந்து சரிவு தான். தன் வாழ் நாள் உச்ச விலையில் இருந்து இன்று வரைக்குமான இறக்கத்தைத் கணக்கிட்டால் லட்சுமி விலாஸ் வங்கி சுமாராக 80% விலை சரிந்து இருக்கிறது.
கடந்த 2019 ஏப்ரல் மாத காலத்திலேயே, லட்சுமி விலாஸ் வங்கியை இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனத்துடன் இணைப்பதைப் பற்றிப் பேசி வந்தார்கள். லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்குநர்கள் குழு, இந்த இணைப்புக்கு அனுமதி கொடுத்துவிட்டதாகவும் சொன்னார்கள். பேசிய படி லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் இந்தியா புல்ஸ் இணைந்து இருந்தால், தற்போது வங்கி அளவில் இந்தியாவின் எட்டாவது பெரிய தனியார் வங்கியாக இருந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 31, 2018 நிலவரப்படி, லட்சுமி விலாஸ் வங்கி 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 569 வங்கிக் கிளைகளையும் 1,046 ஏடிஎம்களையும் இயக்கி வருகிறது. 2018-19 ஆம் ஆண்டில், லட்சுமி விலாஸ் வங்கி கொடுத்திருக்கும் கடன் அளவு, 24,123 கோடியைத் தொட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.