மும்பை: சமையல் எரிவாயு அல்லது திரவ நிலை பெட்ரோலிய எரிவாயு என்று சொல்லப்படும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
அரசு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு அதிரடி முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
எல்பிஜி சிலிண்டர்களை பயனர்களுக்கு ரேஷன் முறையில் கொடுக்கலாம் என முடிவு செய்து இருக்கிறார்களாம். ஆகா, பண்டிகை காலத்தில் கூட வீட்டுக்கு கேஸ் இல்லாமல் அல்லாட வேண்டும் போலிருக்கிறதே..? என பயப்படுகிறீர்களா..?
ரேஷன்
எண்ணெய் சந்தைப்படுத்துதல் செய்யும் நிறுவனங்கள் மொழியில், ரேஷனில் கொடுப்பது என்றால் என்ன..? இதன் பொருள், ஒரே ஒரு எல்பிஜி சிலிண்டரை வைத்திருக்கும் பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வீட்டில் இரண்டு சிலிண்டர்களைக் வைத்திருப்பவர்களுக்கு அவ்வளவு முன்னுரிமை கொடுக்கப்படாது எனச் சொல்கிறார். இதைக் குறித்து எல்பிஜி கேஸ் விநியோகிப்பவர்களிடம் கேட்ட போது ஒரு அதிகாரி வந்து பதில் கொடுத்து இருக்கிறார்.
அவர்கள் மொழியில்
"தற்போது, இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களுக்கு குறைவில்லை. ஆனால் ஓ.என்.ஜி.சியின் யுரான் ஆலை மற்றும் சவுதி அரம்கோவிடம் இருந்து வர வேண்டிய கச்சா எண்ணெய் ஒழுங்காக வரவில்லை. இருப்பினும், நாங்கள் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப சேவை செய்யக் கூடிய அளவுக்கு சிலிண்டர் கைவசத்தில் இருக்கிறது. ஒற்றை சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து சிலிண்டர்களை டெலிவரி செய்கிறோம். எல்பிஜி சிலிண்டர்களுக்கான மாற்று ஆதாரங்களையும் ஏற்பாடு செய்துள்ளோம், இது வரும் வாரத்துக்குள் இந்திய கடற்கரைகளுக்கு வந்து சேரும்" என்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் மூத்த எல்பிஜி அதிகாரி ஒருவர் சொல்லி இருக்கிறார்.
விபத்துக்கள்
கடந்த செப்டம்பர் 03, 2019 அன்று தான் நவி மும்பையின் யுரான் பகுதியில் உள்ள ஓ என் ஜி சி நிறுவனத்தின் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் முதலில் இந்திய மக்களுக்கு கொடுக்க வேண்டிய எல் பி ஜி சிலிண்டர் கேஸுக்கான தட்டுப்பாடு சிறிய அளவில் ஏற்பட்டது. அந்த தட்டுப்பாட்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில் செப்டம்பர் 11, 2019 அன்று சவுதி அராம்கோ நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்தது.
சவுதி அரேபியா
இந்த ட்ரோன் தாக்குதலால், சவுதி அராம்கோ நிறுவனத்தில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வரத்து மேலும் குறைந்தது. இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை சப்ளை செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவுக்கு இரண்டாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் எல்பிஜி சிலிண்டர்களை நம்பி சுமார் 27.3 கோடி குடும்பங்கள் இருக்கின்றனவாம்.
மங்களூர் ஆலை
மேலே சொன்ன 3 நிறுவனங்கள் தவிர, எல்பிஜி சிலிண்டரை வழங்கும் வேலையை மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் (எம் ஆர் பி எல்) நிறுவனமும் செய்து வந்தது. கண மழை காரணமாக மங்களூர் சுத்தீகரிப்பு ஆலை இருந்த பகுதியில் சிறிய நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச் சரிவு காரணமாக, கடந்த மாதம் ஒரு சில யூனிட்களை மூடியது எம் ஆர் பி எல். சில தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு காரணமாக பணியை நிறுத்தி இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதே, பெரிய சவாலாக இருக்கிறது. மற்றொரு பக்கம் வந்த எண்ணெய்யை அல்லது எரிவாயுவை சுத்தீகரிப்பது மேலும் சிக்கலாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
பயப்பட வேண்டாம்
ஆனால் அரசு தரப்போ பண்டிகை காலங்களில் எல்பிஜி சிலிண்டர்களுக்கான சப்ளை குறையவே குறையாது எனச் சொல்லி இருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (பி.எம்.யு.ஒய்) அறிமுகப்படுத்தியதில் இருந்து, எல்பிஜிக்கான தேவை, இந்தியாவில் கணிசமாக வளர்ந்து உள்ளது. நாட்டில் எல்பிஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த 2016-ல் 62% பேர் என்றால் இப்போது சுமார் 95% பேர் எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்துகிறார்களாம்.
எடுத்துக்காட்டு
சமீப காலத்தில் கூட மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் எல்பிஜி சிலிண்டர்களை முன் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக எல்பிஜி சிலிண்டர் சப்ளை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு கொடூரம் இந்தியா முழுக்க, அதுவும் பண்டிகை காலத்தில் வராது, வரக் கூடாது என அரசை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.