கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில், இன்று இந்தியாவில் அன்றாட மக்கள் பயன்படுத்தும் எரிபொருளான, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது.
பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 15 பைசா வரை அதிகரித்துள்ளது. அதே போல நம் பொருட்களின் விலையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், டீசல் ஒரு லிட்டருக்கு 10 பைசா வரை அதிகரித்துள்ளது. ஏற்கனவே, மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை, மும்பையில் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு பெரிய விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 74.43 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 67.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77.03 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 69.66 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80.00 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 70.55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77.28 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 71.09 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மகாராஷ்டிராவின், மராத்வாடா பகுதியில் இருக்கும் பிரபாவதி நகர் எனப்படும் பர்பானி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81.93 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 71.31 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனத்தின் மீதான ட்ரோன் தாக்குதலினால், செப்டம்பர் 17 முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. அப்போதில் இருந்து, விலைகள் தினமும் அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.26 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1.66 ரூபாயும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பதினைந்து நாட்களில் நடந்த மிகப்பெரிய விலை உயர்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
உலக சந்தையில், டபிள்யூ.டி.ஐ ஃப்யூச்சர்ஸ் விலை இதுவரை 3.3% வீழ்ச்சியடைந்துள்ளது, இது கடந்த 10 வாரங்களில் இல்லாத மிகப் பெரிய வார இழப்பாம். அதே நேரத்தில் ப்ரெண்ட் ஃப்யூச்சர்ஸ் கடந்த ஒரு வாரத்தில் 3.2% விலை வீழ்ச்சியடைந்துள்ளது, இது கடந்த ஏழு வாரங்களில் இல்லாத மிகப் பெரிய வார வீழ்ச்சி என்கிறார்கள்.