இந்தியாவின் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிர்வாக மாற்றத்திற்குப் பின் சில அடிப்படை வர்த்தக மாற்றங்களைச் செய்த பின் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வருவதாகக் கூறுகிறது. ஆனால் விமான எரிபொருள் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் லாப அளவீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது ஸ்பைஸ்ஜெட்.
இத்தகைய சூழ்நிலையில், ஸ்பைஸ்ஜெட் தனது வர்த்தகம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 46 புதிய இடங்களுக்கு விமானச் சேவையை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்பைஸ்ஜெட் தற்போது திட்டமிட்டு உள்ள புதிய வழித்தட சேவைகள் அனைத்தும் அக்டோபர் 27ஆம் தேதி துவங்க உள்ளது.
ஸ்பைஸ்ஜெட் புதிதாக ராஜ்கோட், அவுரங்காபாத், ஜோத்பூர், வாரணாசி, ஷீர்டி, விஜயவாடா, மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குப் புதிய விமானச் சேவை அறிமுகம் செய்துள்ளது. இப்பகுதியில் இருந்து நாட்டின் முன்னணி இண்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு இணைக்கப்பட உள்ளது.
இந்த ராஜ்கோட், அவுரங்காபாத், ஜோத்பூர், வாரணாசி, ஷீர்டி, விஜயவாடா, மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 7 பகுதிகளில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பணிகள் எளிதாகச் செல்ல முடியும். அதுமட்டும் அல்லாமல் இது உள்நாட்டு விமானச் சேவையையும் வலிமை அடைய செய்யும் என ஸ்பைஸ்ஜெட் நம்புகிறது.
இதில் முக்கியமாக ராஜ்கோட் - மும்பை இடையில் தினசரி விமானச் சேவை வழங்கவும் ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் சென்னை-துர்காபூர் இடையிலான புதிய சேவையும் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படித் தொடர்ந்து உள்நாட்டு விமானச் சேவையை விரிவாக்கம் செய்யும் ஸ்பைஸ்ஜெட் வெளிநாட்டு விமானச் சேவையிலும் மலிவான கட்டணத்தில் சேவை கொடுத்தால் பல கோடி இந்தியா ஸ்பைஸ்ஜெட்-ஐ கொண்டாடுவார்கள்.
இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து பிரச்சனை சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த அதிரடி வர்த்தக விரிவாக்கம் பெரிய அளவில் பலன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பாக ஏர் இந்தியா அதீத கடன் பிரச்சனையால் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளது, ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடியால் தவிக்கிறது, இண்டிகோ நிறுவனம் விமானக் கோளாறு காரணமாகத் தனது சேவை முழுமையாகக் கொடுக்க முடியாமல் போராடி வருகிறது.
இவை அனைத்தும் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. மேலும் ஸ்பைஸ்ஜெட்-இன் விரிவாக்கம் பல லட்ச மக்களின் போக்குவரத்து பிரச்சனையைத் தீர்க்க உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு ஜாலியோ ஜாலி தான்.