மும்பை: தலைப்பைப் படித்தாலே பரிதாபமாக இருக்கிறது. ஒரு பக்கம் அண்ணன் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையால் பெரிய கடனாளி ஆகி படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். கிட்டத் தட்ட நடுத் தெருவுக்கே வந்துவிட்டார்.
அண்ணன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். தம்பி அனில் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கூட தூரம் விலகிக் கொண்டே இருக்கிறார். இப்போது அனில் அம்பானிக்கு இன்னொரு பலத்த அடி விழுந்திருக்கிறது.
ரிலையன்ஸ் கேப்பிட்டல்
அனில் அம்பானியின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஒரு சில நல்ல நிறுவனங்களில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனமும் ஒன்று. அந்த ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் கீழ் தான் ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனம் இருக்கிறது. அதாவது இந்த ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ஒரு பெரும் பகுதி பங்குகளை, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் வைத்திருக்கிறார்கள்.
21 % விற்பனை
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் தன் வசம் வைத்திருக்கும், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் 21.54 சதவிகித பங்குகளை, ஜப்பான் நாட்டின் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விற்று இருக்கிறார்களாம். இந்த டீலுக்காக நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துக்கு சுமார் 3,030 கோடி ரூபாயைக் கொடுக்கப் போகிறதாம்.
4.28 % அடுத்த விற்பனை
மேற்கொண்டு ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் 4.28 சதவிகித பங்குகளையும் சுமார் 700 கோடி ரூபாய்க்கு அதே ஜப்பானின் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமே விற்கப் போகிறார்களாம். இதற்கு முன்பே, 3 தவணைகளில், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் 17.06 % பங்குகளை ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் விற்று சுமார் 2,480 கோடி ரூபாயைத் திரட்டி இருக்கிறார்களாம்.
கடன் எல்லாம் கடன்
ஆக மொத்தத்தில், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், தன் வசம் வைத்திருக்கும், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் பங்குகளை, விற்பதால் சுமாராக 6,000 கோடி ரூபாய் வரை கிடைக்குமாம். இந்த பணத்தை வழக்கம் போல அனில் அம்பானி தன் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் வாங்கி இருக்கும் மலை அளவு கடன்களை அடைக்கப் பயன்படுத்தப் போகிறதாம்.
நிம்மதி
இப்படியாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் தன் கையில் வைத்திருக்கும் சொத்து பத்துக்களை எல்லாம் விற்று, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்துக்கு இருக்கும் சுமார் 17,000 கோடி ரூபாய் கடனில் ஒரு 12,000 கோடி ரூபாயையாவது, இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்குள் அடைத்து விட்டு நிம்மதியாக இருக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஏற்கனவே ரிலையன்ஸ் கேப்பிட்டல் டிரஸ்டீ மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் ஏ ஐ எஃப் டிரஸ்டி போன்ற நிறுவன பங்குகளை விற்று விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்கள் ரிலையன்ஸ் கேப்பிட்டல் தரப்பினர்.