டெல்லி: நாளுக்கு நாள் கல்விக் கட்டணமானது விண்னைத் தொடும் அளவுக்கு உயர்ந்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் என கூறி பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது.
இந்த நிலையில் நடுத்தர மக்கள் மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு சில துறைகள் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. எனினும் அந்த வகையில் ஒரு சிலரின் தீவிர முயற்சியால், ஐ.ஐ.டி உள்ளிட்ட பல பொதுக் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
ஏனெனில் மற்ற தனியார் நிறுவனங்களை விட இங்கு கட்டணம் குறைவாக இருக்குமே என்பது தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
10 மடங்கு கட்டணம் உயர்வு
இந்த நிலையில் ஐஐடி பல்கலைக் கழகத்தில் எம்.டெக் படிப்புக்கான கட்டணமானது 10 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த கட்டணமானது தற்போது வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் உயர்த்த முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த கட்டணமானது தொடங்கி மூன்று ஆண்டுகள் காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
செயல்திறன் இல்லாதவர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டம்
மேலும் இந்த ஐஐடி கவுன்சில், ஆசிரிய உறுப்பினர்களில் செயல்திறன் அற்றவர்களை களையவும் ஒரு மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிய ஆசிரியர்கள் ஐந்தரை ஆண்டுகளுக்கு பின்பு மதிப்பாய்வு செய்யப்படுவார்கள் என்றும், இதன் படி மிக மோசமான செயல்திறன் கொண்டவர்கள் வெளியேறுமாறு கேட்கப்படலாம் என்றும், இந்த கவுன்சில் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் கூறியுள்ளது.
வருட கட்டணம் இது தான்
தற்போது ஐஐடியில் படிக்கும் எம்டெக் மாணவர்களுக்கு 20,000 - 50,000 வரை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கிறது என்றும், இது எம்.டெக் படிப்புகளுக்கான டியூசன் பீஸ் என்றும் கூறப்படுகிறது. எனினும் ஒரு வருடத்துக்கு மொத்த கட்டணம் 7 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், 2 லட்சம் ரூபாய் மானியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த கட்டண உயர்வானது மேலும் மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
சலுகை பறிக்கப்படுகிறதா?
இது தவிர 23 ஐ.ஐ.டிகளின் உச்ச முடிவை எடுக்கும் அமைப்பானது, பட்டதாரி ஆப்டியூட் டெஸ்ட் (கேட்) தேர்வின் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து எம்.டெக் மாணவர்களுக்கும் 12,400 ரூபாய் உதவித்தொகை கொடுத்து வரப்படுகிறது, இனி இந்த சலுகையும் நிறுத்தப்போவதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் 2019ம் ஆண்டில் 12,000 எம்.டெக் மாணவர்களில் 9,280 பேர் கேட் தேர்வுகளின் அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பரிந்துரை குழு என்ன சொல்கிறது
இந்த பரிந்துரைக் குழுவானது முக்கிய ஐந்து விஷயங்களை பற்றி கூறியுள்ளது என்றும், முதலாவதாக எம்.டெக் படிப்பிற்கான கட்டணத்தொகையை 2 லட்சமாக உயர்த்த வேண்டும், மேலும் தேவைப்படும் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும், மாத மாதம் வழங்கப்படும் 12,400 ரூபாய் உதவி தொகை நிறுத்தப்பட வேண்டும் என்றும், மேலும் பேராசிரியர்களின் உதவியாளர்களின் பங்கை ஏற்க விரும்பும் திறமையான எம்.டெக் மாணவர்களுக்கு, கட்டண உயர்வில் 50 சதவிகிதம் சலுகை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
நிதியுதவி ஊக்குவிப்பு
ஒரு சிறந்த கல்வி நிறுவனங்களில் பி.ஹெச்.டி படிப்பை படித்து வரும், முதல் ஒரு சதவிகித மாணவர்களுக்கு பெல்லோஷிப் வழங்க முடியும் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும் எம்.டெக் படிப்புகளைத் தொடர ஐ.ஐ.டிக்களை தொழில்துறையிலிருந்து நிதியுதவி பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் முறையும் வழங்கப்படும் என்றும் இந்த பரிந்துரை குழு கூறியுள்ளது. மேலும் ஐஐடி கமிட்டி மாணவர்களை ஊக்குவிக்க ஒப்பந்த விரிவுரையாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் அமர்த்தப்படுவார்கள் என்று கூறியுள்ளது.