மும்பை : முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக பி.எம்.சி வங்கிக்கு 6 மாதம் தடை விதித்ததோடு, இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய்க்கும் மேல் எடுக்க முடியாது என்று கூறியது ஆர்.பி.ஐ.
ஆனால் இதனால் கடும் கோபத்திற்கு ஆளான பி.எம்.சி வங்கியின் மீது வாடிக்கையாளர்கள் படையெடுக்கவே தற்போது தினசரி 10,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் விதிமுறையை தளர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பி.எம்.சி.) வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக வந்த புகாரையடுத்து, ரிசர்வ் வங்கி பி.எம்.சி. வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளையும் 6 மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு
இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் வெறும் ரூ.1,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தொழிலதிபர்கள், வர்த்தகம் சார்ந்த பரிவர்த்தனைகள் பெரிதும் முடங்கியதையடுத்து, மக்கள் வங்கியை நோக்கி படையெடுத்தனர். முன்னதாக இவ்வங்கியின் செயல்பாடுகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்க முடியாமல் பரிதவித்து வந்த நிலையில் தற்போது ஆர்.பி.ஐ இதற்கெல்லாம் மாற்றாக தினசரி ரூ.10,000 எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
வங்கியின் முன்பு கோஷம்
அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சயானில் உள்ள இவ்வங்கியின் கிளை முன்பு பல வாடிக்கையாளர்கள் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதோடு, தாங்கள் டெபாசிட் செய்த பணத்தை தரும்படியும், மேலும் ஊழல் பெருச்சாளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷம் இட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்காக அவர்கள் நீதிமன்றத்தையும் அணுக போவதாகவும் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் மீது புகார்
இந்த நிலையிலேயே சயான் போலீஸ் நிலையத்தில் ஏராளமான, இவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கு வாடிக்கையாளர்கள் குவிந்ததோடு, அவர்கள் மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீதும் புகார் கொடுத்துள்ளனர். குறிப்பாக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளது கவனிக்கதக்கது. இது குறித்து அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது, இவ்வங்கி வாடிக்கையாளர்களின் ரூ.8,000 கோடியில் எச்.டி.ஐ.எல் என்ற ரியல் எஸ்டே் நிறுவனத்துக்கு பினாமி பெயரில் ரூ.3,000 கோடி வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 9.12 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதனால் வங்கி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகள் தளர்வு
இந்த முறைகேடு தொடர்பான புகாரை தொடர்ந்து வங்கியின் பரிவர்த்தனை முடக்கப்பட்டதால் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. குறிப்பாக ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ரூ.1000 மட்டுமே தங்கள் கணக்கில் இருந்து எடுக்க முடியும் என்று கூறியிருந்தது. இதனால் கொந்தளித்த வாடிக்கையாளர்கள், எங்களது டெபாசிட் பணத்தை கூட எடுக்க முடியாவிட்டால் எப்படி என்று கடுப்படைந்துள்ள நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
சற்றே ஆறுதல் அடைந்த வாடிக்கையாளர்கள்
இந்த கொள்கை தளர்வானது சேமிப்பு, நடப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வங்கி கணக்குதாரர்களுக்கும் பொருந்தும் என்றும். இந்த அறிவிப்பு காரணமாக 60 சதவிகித வாடிக்கையாளர்கள் தங்களது முழு பணத்தையும் 6 மாதத்திற்குள் எடுத்து கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த தளர்வால் பி.ம்.சி. வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக இது அமைந்துள்ளது.
கடனை திரும்ப செலுத்தாதவருக்கு மீண்டும் கடன்
இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு வங்கியில் கடன் வாங்கி விட்டு அது வாராக்கடனாக இருந்தால். நமக்கு அந்த வங்கி மட்டும் அல்ல, எந்த வங்கியிலுமே கடன் வாங்க முடியாது. ஆனால் பி.எம்.சி வங்கியோ தன்னிடம் 2,500 கோடி ரூபாய் கடன் வாங்கிய கடனாளி, திரும்ப செலுத்தாத நிலையிலும் கூட, திரும்ப அவர்களுக்கு தனி நபர் கடனாக 96.5 கோடி ரூபாய் வாரி வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திவால் நிறுவனத்திற்கு கடன்
முன்னதாக பேங்க் ஆப் பரோடாவுக்கு செலுத்த வேண்டிய 520 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்ததாத நிலையில், ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்தின் மீது பேங்க் ஆப் பரோடா வங்கி, இந்த நிறுவனத்தின் மீதான திவால் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையிலேயே இவ்வங்கியிடம் சமரசம் செய்த ஹெச்.டி.ஐ.எல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேசிய சட்ட நிறுவனத்தினை அணுகுவதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆகஸ்ட் 20 வரை சரியான உடன்பாடு ஏற்படாததால் ஹெச்.டி.ஐ.எல்லுக்கு எதிராக தீர்ப்பாயத்தில் புதிய மனுவை சமர்பித்தது பேங்க் ஆப் பரோடா.
கடன் வாங்கி கடனை கட்டியது
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று, பேங்க் ஆப் பரோடா மேலும் இரண்டு வாரங்களுக்கு இந்த திவால் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக கூறியது. காரணம் இந்த நிறுவனம் 96.5 கோடி மதிப்பிலான பே ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும், இது பி.எம்.சியால் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதனை இவ்வங்கியும் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன சொல்கிறது ஆர்.பி.ஐ
ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் பி.எம்.சி வங்கியின் மொத்த கடன் சுமார் 8,300 கோடி ரூபாய் என்று கூறியது. இதில் சுமார் 31% ஹெச்.டி.ஐ.எல்லுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது ரிசர்வ் வங்கி விதித்த சதவிகிதத்தினை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரிசவ் வங்கியின் வழிகாட்டுதல் படி, ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு அதன் மொத்த வெளிப்பாட்டின் 15 சதவிகிதத்தினை தாண்டி வங்கிகள் கடன் கொடுக்க கூடாது என்றும் கூறப்படுகிறது. ஆனால் பி.எம்.சியோ 31% வாரி வழங்கியுள்ளது.