டெல்லி : ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இணைப்பின் போது மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
முன்னதாக பல முறை இந்த இணைப்புக்கு நீட்டிப்பு இருந்த நிலையில், இந்த முறையும் நீட்டிப்பு இருக்குமா? என்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் மத்திய அரசு அவ்வாறு செப்டம்பர் 30க்குள் இணைக்கப்படவில்லை எனில் அக்டோபர் 1லிருந்து உங்களது பான் எண் செல்லாது என்றும் கூறியுள்ளது நினைவு கூரத்தக்கது.
ஏனெனில் பணபரிவர்த்தனையின் போது முக்கியமாக தேவைப்படும் பான் எண், செயல்படாது எனில், உங்களால் எந்த முறையான நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது என்றும் கருதப்படுகிறது.
மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது
ஆக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இதற்கு கால அவகாசம் உள்ள நிலையில், இவ்வாறு அரசு கூறியது போல் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் லிங்க் செய்யாவிட்டால், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. என்ன தான் அரசு கூறி வந்தாலும், நம்மவர்களின் பழக்கமே கடைசி நிமிடத்தில் எதையும் செய்வது தானே. இந்த கடைசி நிமிடத்தில் பற்பல சோதனைகளும் பிரச்சனைகளும் வரும், ஆக நீங்களே நினைத்தாலும் கூட உங்கள் பான் எண்ணுடம் ஆதாரை இணைக்க முடியாமல் கூட போகலாம்.
அப்படி என்ன பிரச்சனை?
அப்படி என்ன பிரச்சனை இந்த இணைப்பில் வந்திட போகிறது என்று கேட்கிறீர்களா? பொதுவாக இப்படி இணைப்புகளில் பெரும்பாலும் வரும் பிரச்சனையே பெயர் மாற்றம் தான். அதாவது பான் கார்டில் ஒரு பேரும், ஆதார் கார்டி ஒரு பேரும் இருக்கும். ஏன் பெயரில் சிறு மாறுதல் இருந்தால் கூட உங்களால், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாது. உதாரணத்திற்கு சிலர் தங்களது பான் கார்டில் செல்வராஜ் என்று இருக்கும், இதே ஆதார் கார்டில் செல்வராசு என்று இருக்கும், இத்தகைய சிறு தவறுகளால் கூட பான் - ஆதார் இணைக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.
பிறந்த தேதியில் மாற்றம்
சிலர் தங்களது ஆதார் கார்டுகளில் ஒரு பிறந்த தேதியும், பான் கார்டில் ஒரு தேதியும் இருக்கும், இதனால் பான் ஆதார் இணைப்பு இணைக்க முடியாமல் போகும். சிலர் ஆதார் கார்டு எடுக்கும் போது தவறான பிறந்த தேதியினை தெரியாமல் கொடுத்திருக்கலாம். இல்லையேல் அதை பதிவு செய்பவர்கள் தவறாக செய்திருக்கலாம், இதனால் கடைசி நிமிட நேரத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்ய நினைப்பவர்கள் பெரும் பிரச்சனையை சந்திக்கலாம்.
இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
இவ்வாறு இந்த பான் எண், ஆதார் எண்களில் உள்ள தவறுகளை மாற்றிக் கொள்வது மட்டுமே இதற்கான ஒரே வழி. உதாரணத்திற்கு ஆதார் கார்டில் உள்ள தவறுகளை UIDAIல் கூறி களைய வேண்டும், இதே பான் எண்ணில் உள்ள தவறுகளை களைய NSDL அணுக வேண்டும் என்றும், இது தவிர UTI அணுகலாம். ஆக இந்த தவறுகளை களைந்த பின்னர் தான், நீங்கள் ஆதார் - பான் எண்ணினை இணைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.