லட்சுமி விலாஸ் வங்கியை ஆர்பிஐ தன்னுடைய பிசிஏ - PCA - Prompt Corrective Action என்கிற இரும்புக் கரத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து இருக்கிறது.
Prompt Corrective Action என்றால் என்ன..? வங்கிகளின் நிதி நிலையைப் பொறுத்து தான் ஆர்பிஐ-ன் PCA திட்டத்தின் கீழ் வங்கிகள் கொண்டு வரப்படும். PCA-வில் பட்டியலிடப்படும் வங்கிகள் பெரிய தொகைகளை டெபாசிட்டுகளாக வாங்கக் கூடாது. அதே போல் இருக்கும் டெபாசிட்டுகளைக் கூட மறு டெபாசிட்டுகளாக (Renew) செய்யக் கூடாது. ஆர்பிஐ அனுமதி இல்லாமல் புதிய சேவைகளை வழங்கவோ, கூடுதல் கட்டணங்களை வசூலிக்கவோ, மற்ற வங்கிகளிடம் கடன் வாங்கவோ, புதிய கிளைகளைத் திறக்கவோ, பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகைகளைக் கொடுப்பதோ கூடாது.
மிக முக்கியமாக PCA திட்டத்தின் கீழ் இருக்கும் வங்கிகள் ஆர்பிஐ அனுமதி இல்லாமல் பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. குறிப்பாக கார்ப்பரேட்டுக்கு பெரிய கடன் தொகைகளை வழங்கவே கூடாது. ஒரு வங்கி ஆர்பிஐ-ன் பிசிஏ திட்டத்தின் கீழ் கொண்டு போய் இருக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு அந்த வங்கியின் நிதி நிலை பலவீனமாக இருக்கிறது என்று பொருள். இப்போதைக்கு இந்தியன் ஓவர் சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ பேங்க், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, யுகோ பேங்க் போன்ற வங்கிகள் இன்னமும் பிசிஏ திட்டத்தின் தான் இருக்கின்றன.
லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தினர், பங்குச் சந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் வங்கியின் வாராக் கடன்கள் மிக அதிகமாக இருப்பது, போதுமான முதல் தொகைகளை கையில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது, முதலீடு செய்திருக்கும் சொத்துக்களில் இருந்து நஷ்டம் வருவது என பல தவறுகளைக் ஆர்பிஐ சுட்டிக் காட்டி இருக்கிறதாம். இதை எல்லாம் காரணம் காட்டித் தான் ஆர்பிஐ லட்சுமி விலாஸ் வங்கியை பிசிஏ திட்டத்தில் சேர்த்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச காலம், யாரும் லட்சுமி விலாஸ் வங்கியைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் தானாகவே திவால் ஆகி இருக்கக் கூடும். நல்ல வேளையாக ஆர்பிஐ கண்டு பிடித்து தற்போது பிசிஏ திட்டத்தின் கீழ் கொண்டு வந்து இருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டில், லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன் 7.49 சதவிகிதமாகவும், capital adequacy ratio 7.72 சதவிகிதமாகவும், முதலீடு செய்த சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் -2.32 சதவிகிதமாகவும் இருக்கிறதாம்.
நேற்று, லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் பிஎஸ்இயில் 5% சரிந்து 35.55 ரூபாய் என்கிற லெவல்களைத் தொட்டு வர்த்தகமானது. அதோடு தன் டவுன் சர்க்யூட் விலையையும் தொட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு என்ன காரணம் எனக் கேட்கிறீர்களா..? டெல்லியின் பொருளாதார குற்றப்பிரிவினர் லட்சுமி விலாஸ் வங்கி இயக்குநர்கள் மீது மோசடி செய்தது, குற்றவியல் விதிகள் படி நம்பிக்கையை மீறுதல், குற்றவியல் நடைமுறைகள் படி முறைகேடு மற்றும் கிரிமினல் சதித் திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளைச் சொல்லி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இருக்கிறார்களாம். இதனால் தான் லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகள் தரை தட்டிக் கொண்டு இருக்கின்றன.
இந்த வழக்குப் பிரச்னை வெளி வந்த உடன், லட்சுமி விலாஸில் பணத்தைப் போட்டு இருக்கும் டெபாசிட்தாரர்கள் மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளில் பணத்தை முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்களாம். லட்சுமி விலாஸ் வங்கிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பொருளாதார குற்றப் பிரிவினர் தாக்கல் செய்திருப்பதை வங்கி நிர்வாகமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.