டெல்லி : பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மீண்டும் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
முன்னதாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால், அவர்களின் பான் கார்டு செல்லாது என்றும் மத்திய அரசு எச்சரித்தது.
இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், இதனை பற்றி மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 30ம் தேதி தான் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 30க்குள் இந்த பான் ஆதார் எண் இணைப்பு செய்யாவிட்டால், உங்களது பான் எண் செல்லாது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையிலும் கூட, இன்னும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் பான்- ஆதார் இணைப்பை செயல்படுத்தாத நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல முறை கால நீட்டிப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த முறையும் டிசம்பர் 31குள் பான் எண் உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், நிச்சயம் உங்கள பான் செல்லாததாகி விடலாம். ஆக மக்கள் இதற்கு முன்பு இந்த இணைப்பை செய்துவிடுவது நல்லது.
இந்த இணைப்பின் போது பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவற்றை களைந்து, இந்த 3 மாத காலக்கெடுவிற்குள் சரி செய்ய வேண்டும். ஏனெனில் பான் எண்ணில் பெயர் மாற்றம், ஆதாரில் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பெயர்களில் உள்ள ஒர் சில எழுத்துகள் மாற்றத்தினால் கூட கடைசி நிமிடத்தில், இந்த இணைப்பில் பிரச்சனையாக அமையலாம், ஆக மக்கள் இவற்றை இப்போதே இணைக்க முற்பட வேண்டும். இதனால் உங்கள் நிதி பரிவர்த்தனை பாதிக்கப்படாமலும் இருக்கும்.