இன்று செப்டம்பர் 30, 2019 ஒரே நாளில் ஆந்திரப் பிரதேச அரசு, சுமார் 1.26 லட்சம் பேருக்கு அரசு வேலையில் சேர்வதற்கான பணி நியமனக் கடிதத்தைக் கொடுத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது. இப்படி ஒரே நாளில் 1.26 லட்சம் பேரை பணியில் நியமிப்பது கிட்ட தட்ட இந்திய சாதனை எனவும் சொல்கிறார்கள்.
இந்த சாதனையை, இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும். இதுவரை இந்தியாவில், ஒரே நேரத்தில் 1.26 லட்சம் நிரந்தரப் பணியிடங்களை எந்த ஒரு அரசும் உருவாக்கியது இல்லை. இந்த 1.26 லட்சம் பேரும் வியக்கத் தக்க வகையில் வெறும் இரண்டே மாதங்களில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என பெருமையாகச் சொல்லி இருக்கிறார் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன்.
இந்த 1.26 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு, சுமார் 21 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தார்களாம். அவர்களில் 19.5 லட்சம் பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வை எழுதினார்களாம். 500-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு நடத்திய இந்த தேர்வு, கடந்த செப்டம்பர் 01 முதல் செப்டம்பர் 08 வரை நடந்ததாம். தேர்வில் தேறிய 1.98 லட்சம் பேரில் 1,26,728 பேருக்கு பணி நியமன ஆணைய வழங்கப்பட்டு இருக்கிறதாம். இந்த 1.26 லட்சம் வேலை வாய்ப்புகளில் 31,640 பதவிகள் நகர் புறங்களில் பணியாற்றும் விதமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன், விஜயவாடாவில்,இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி வேலையைத் தொடங்கி வைத்தார்.
கிராம செயலகம் மற்றும் வார்ட் செயலகம் திட்டங்கள் வரும் டிசம்பர் 2019 முதல் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும் எனவும் சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு செயலகத்திலும் 10 - 12 அரசு ஊழியர்கள் இருப்பார்கள். இந்த ஊழியர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் பஞ்சாயத்து ராஜ், கிராமபுற மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், மின்சாரம், விவசாயம், நல வாரியம், நகராட்சி போன்ற துறைகளில் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த செயலகங்கள் வழியாக ஆந்திர மக்களுக்கு சுமார் 500 அரசு சேவைகளை வழங்க இருக்கிறார்களாம்.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 01 முதல் 31 வரை ஆந்திரப் பிரதேச அரசு அலுவலகங்களில் இருக்கும் காலிப் பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பணி இடங்கள் நிரப்பப்படும் எனவும் சொல்லி இருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.