லட்சுமி விலாஸ் பேங்கை நம்பி வங்கியில் டெபாசிட் போட்டவர்களாக இருக்கட்டும், அந்த வங்கியின் செயல்பாடுகளை நம்பி பங்குகளில் முதலீடு செய்தவர்களாக இருக்கட்டும், இருவருமே பெரிய வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 26, 2019 அன்று லட்சுமி விலாஸ் பேங்க் பங்குகள் விலை 38.45 ரூபாய்க்கு நிறைவு அடைந்தது. அதற்கு அடுத்த நாளே ஒரு பெரிய குண்டு வந்து விழுந்தது.
டெல்லியில் பொருளாதார குற்றப் பிரிவினர் லட்சுமி விலாஸ் வங்கி இயக்குநர்கள் மீது மோசடி செய்தது, குற்றவியல் விதிகள் படி நம்பிக்கையை மீறுதல், குற்றவியல் நடைமுறைகள் படி முறைகேடு மற்றும் கிரிமினல் சதித் திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளைச் சொல்லி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார்கள். இதனால் தான் லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகள் தரை தட்டி வர்த்தகம் ஆவதில் இருந்து ஒத்தி வைக்கப்பட்டது.
அதற்கு அடுத்த நாள் இன்னொரு இடி வந்து விழுந்தது. லட்சுமி விலாஸ் வங்கியை ஆர்பிஐ தன்னுடைய பிசிஏ - PCA - Prompt Corrective Action என்கிற இரும்புக் கரத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்த செய்தி வெளியானது. இந்த செய்தி கடந்த செப்டம்பர் 28, 2019, சனிக்கிழமை அன்று பரவத் தொடங்கியது. அன்று சந்தை விடுமுறை என்பதால் பங்குச் சந்தையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இன்று காலை லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகள் மீண்டும் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகளின் விலை 5 சதவிகிதம் சரிந்து தன் லோயர் சர்க்யூட்டை மீண்டும் தொட்டது. எனவே தற்போது மீண்டும் பங்கு வியாபாரத்தில் ஈடுபடாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு வர்த்தக நாளில் மட்டும் லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகளின் விலை 10 சதவிகிதம் வரை சரிந்து இருக்கிறது. இந்த 2019-ம் ஆண்டில் மட்டும், இது நாள் வரை லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகளின் விலை சுமார் 58% வரை சரிந்து இருக்கிறதாம். லட்சுமி விலாஸ் வங்கி பங்கு, கடந்த 21 ஜூலை 2017 அன்று தன் வாழ் நாள் உச்சமான 189.32 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அதற்குப் பின் தொடர்ந்து சரிவு தான். தன் வாழ் நாள் உச்ச விலையில் இருந்து இன்று வரைக்குமான இறக்கத்தைத் கணக்கிட்டால் லட்சுமி விலாஸ் வங்கி சுமாராக 80% விலை சரிந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லட்சுமி விலாஸ் வங்கி, ஆர்பிஐயின் பிசிஏ திட்டத்தில் இருப்பதால், வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் மக்களுக்கு, தங்கள் பணம் என்ன ஆகுமோ..? என வயிற்றில் புளி கரைத்துக் கொண்டு இருக்கிறது. லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை நம்பி முதலீடு செய்திருப்பவர்களுக்கோ இப்போதே பங்கு விலைச் சரிவால் நஷ்டம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.