Recommended Video
இந்தியப் பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கிறது என தன் விற்பனை சரிவின் வழியாக, மிகவும் விரிவாகச் சொன்ன, சொல்லிக் கொண்டு இருக்கும் நிறுவனம் நம் மாருதி சுசூகி தான். அதோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின், ஓலா உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டர்களால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை நேரடியாக பாதிக்கப்படுகிறது என்கிற அழுத்தமான கருத்தையும் பொது வெளியில் பகிரங்கமாக ஆதரித்ததும் நம் மாருதி சுசூகி தான்.
தன் விற்பனையை அதிகரிக்க பல மாருதி சுசூகி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார் மாடல்களின் விலையை கடந்த செப்டம்பர் 25, 2019 அன்று 5,000 ரூபாய் வரை குறைத்தது. மேலே சொன்ன விலை குறைப்புகளுடன், சமீபத்தில் சில தினங்களுக்கு முன் பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை 1,00,000 ரூபாய் வரை குறைத்தது.
இதுவரை விலையைக் குறைத்தது எல்லாம் போதாது என தற்போது 3.69 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை அறிமுகப்படுத்தி அனைவரையும் அசர அடித்து இருக்கிறது மாருதி சுசூகி. இந்த காரின் பெயர் எஸ் பிரஸ்ஸோ (S-Presso). இது ஒரு மினி எஸ் யூ வி ரக கார். இதன் விலை 3.69 லட்சம் ரூபாய் முதல் 4.91 லட்சம் ரூபாய் வரை இருக்குமாம்.
மாருதி சுசூகி நிறுவனம் செலிரியோ என்கிற என்ட்ரி லெவல் ரக காரை 2014-ல் கொண்டு வந்தது. அதன் பின் இப்போது தான் என்ட்ரி ரகத்தில் எஸ் பிரஸ்ஸோ வழியாக புதிய காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தன் புதிய எஸ் பிரஸ்ஸோ (S-Presso)காரை மாருதி சுசூகி தென் ஆப்பிரிக்கா, இலங்கை, லத்தின் அமெரிக்க நாடுகள் என பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறார்களாம். இந்த குட்டி காருக்காக மாருதி சுசூகி சுமார் 640 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார்களாம்.
மிக முக்கியமாக இது பாரத் ஸ்டேஜ் 6 ரக விதிமுறைகளின் படி தயாரிக்கப்பட்ட, பெட்ரொல் இன்ஜினைக் கொண்ட வாகனமாம். மாருதி சுசூகி, வழக்கம் போல தன் டீலர்கள் வழியாகத் தான் இந்த வாகனத்தை விற்கப் போகிறார்களாம். கார் உலகம் இந்த காரை அண்ணாந்து பார்த்தாலும், பங்குச் சந்தை உலகம் இப்போது வரை இந்த செய்தியை கவனித்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் 0.90 % விலை இறக்கத்துடன் 6,720 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது மாருதி சுசூகி பங்குகள்.