உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சவுதி அரசு இந்தியாவை மிகப்பெரிய அளவில் நம்புவதாகவும், இந்தியாவுடன் நீண்ட கால நட்புறவு மற்றும் வர்த்தகப் பங்கீட்டைக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா இந்தியாவில் பெட்ரோ கெமிக்கல், இன்பராஸ்டெக்சர் மற்றும் சுரங்கம் ஆகிய துறையில் இந்த 100 பில்லியன் டாலர் முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்துச் சவுதி அரேபியாவின் அம்பாசிட்டர் Dr Saud bin Mohammed Al Sati கூறுகையில், இந்தியா தற்போது எங்களின் முக்கியமான முதலீட்டுத் தளமாக உள்ளது. நாங்கள் இந்தியாவில் எண்ணெய், எரிவாயு மற்றும் சுரங்க துறையில் அதிகளவில் முதலீடு செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா தற்போது அறிவித்துள்ள 100 பில்லியன் டாலர் என்கிற மிகப்பெரிய அன்னிய முதலீடு ரூபாய் மதிப்பையும் வர்த்தகச் சூழ்நிலையை மாற்றும், ஆனால் இந்த முதலீட்டால் அதிகம் லாபம் அடையப்போவது சவுதி அரேபியா தான் என்றால் மிகையில்லை.
இந்த 100 பில்லியன் டாலர் தொகை எனர்ஜி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், இன்பராஸ்டக்சர், விவசாயம், கனிமம், மற்றும் சுரங்கம் ஆகிய 7 துறைகளில் பிரித்து முதலீடு செய்ய உள்ளதாகச் சவுதி கூறியுள்ளது. 100 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் நாட்டில் பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அஸ்திவாரமான பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகப் பிரிவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 20 சதவீத பங்குகளைச் சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான ஆராம்கோ-விற்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு உள்ளார். இதுநாள் வரையில் முகேஷ் அம்பானி தான் இருக்கும் துறையிலும், நிறுவனத்திலும் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக அன்னிய நிறுவனத்திற்கு வழி விட்டுள்ளார்.
சவுதி ஆராம்கோ முதலீடும் செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 75 பில்லியன் டாலர் இந்நிலையில் ஆராம்கோ வாங்கும் 20 சதவீத பங்குகளின் மதிப்பு 15 பில்லியன் டாலர்.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட உள்ள 15 பில்லியன் டாலர் தொகையும் சவுதி அரேபியாவின் 100 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தில் அடக்கம்.
இதுநாள் வரையில் இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு மிகவும் குறைந்த அளவீடாகவே இருந்த நிலையில் முதல் சவுதியின் 100 பில்லியன் டாலர் முதலீடு இந்திய கச்சா எண்ணெய் துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றப்போகிறது.
சவுதி முதலீட்டுக்குப் பின் இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மக்களின் பயன்பாட்டிற்குத் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு உள்ளது.