இந்தியாவில் பொருளாதார மந்த நிலையே இல்லை என்கிற ரீதியில் வாதாடிக் கொண்டு இருக்கும் ஆளும் அரசுகள், இப்போதாவது ஆட்டோமொபைல் விற்பனை சரிவைப் பார்க்க வேண்டும். மாருதி சுசூகி, அசோக் லேலண்ட் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் சுமாராக கடந்த ஒரு ஆண்டு காலமாக விற்பனை சரிவதை இப்போதும் மறுப்பார்களா..?
தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டு காலமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சரிந்து கொண்டு இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் பயணிகள் வாகனம், இரு சக்கர வாகனம் தொடங்கி வணிக வாகனங்கள் வரை அனைத்து பிரிவும் மண்ணைக் கவ்விக் கொண்டு இருக்கிறது. சுருக்கமாக விற்பனை அதள பாதாளத்தில் இருக்கிறது.
அதற்கு சமீபத்தைய எடுத்துக்காட்டாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2019 செப்டம்பர் மாத விற்பனை 55 சதவிகிதம் சரிந்து இருப்பதை மத்திய அரசு முதல் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதே எனச் சொல்லும் அனைவரும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
இந்தியாவில் வணிக ரீதியிலான லாரி போன்ற வாகனங்களைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனங்களில் அசோக் லேலண்டும் ஒன்றும். இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் 2018-ல் 19,374 வணிக வாகனங்களை விற்றது. ஆனால் இந்த செப்டம்பர் 2019-ல் வெறும் 8,780 வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறது. ஆக சுமார் 55 சதவிகிதம் அளவுக்கு வாகன விற்பனை சரிந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மீடியம் மற்றும் கண ரக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 67 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். அதாவது செப்டம்பர் 2018-ஐ விட 67 சதவிகிதம் குறைவான மீடியம் மற்றும் கண ரக வாகனங்களைத் தான் செப்டம்பர் 2019-ல் விற்பனை செய்து இருக்கிறார்களாம்.
அதே போல அசோக் லேலண்ட் நிறுவனத்தின் லட் கமர்ஷியல் வாகனங்களின் உள்நாட்டு விற்பனையும் 21 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். அதாவது செப்டம்பர் 2018-ஐ விட 21 சதவிகிதம் குறைவான லைட் கமர்ஷியல் வாகனங்களைத் தான் செப்டம்பர் 2019-ல் விற்பனை செய்து இருக்கிறார்களாம்.