இந்தியாவில் பெரும்பாலான வீடுகள் சமையல் தேவைக்காக பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை இரண்டாவது மாதமாக தொடர்ந்து விலை ஏற்றப்பட்டு இருக்கிறது. 14 கிலோ சமையல் எரிவாயு கொண்ட ஒரு சிலிண்டருக்கு சுமாராக 15 ரூபாய் அதிகரித்து இருக்கிறார்களாம்.
இந்த விலை ஏற்றத்தால் இனி டெல்லியில் ஒரு 14 கிலோ எரிவாயு கொண்ட சிலிண்டருக்கு 605 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். கொல்கத்தாவில் 630 ரூபாய், மும்பையில் 575 ரூபாய், சென்னையில் 620 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்குமாம்.
இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறதாம். ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும், அரசு எண்ணெய் நிறுவனங்கள் (சிலிண்டரை வழங்கும் நிறுவனங்கள்) தங்கள் புதிய விலையை நிர்ணயிப்பார்கள். அந்த விலையின் அடிப்படையில் தான் மக்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறதாம்.
கடந்த மாதம் கூட அரசு எண்ணெய் நிறுவனங்கள், 14 கிலோ எரிவாயு கொண்ட சிலிண்டருக்கு சுமார் 15.5 ரூபாயை உயர்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை நிர்ணயிக்கும் போதும் சர்வதேச எல்பிஜி சிலிண்டர் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு போன்றவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் விலையை நிர்ணயிப்பார்களாம்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ என்கிற எண்ணெய் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்கள் சப்ளை பாதிக்கப்படும் எனச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் அந்த செய்திகளை வலுவாக மறுத்தது. அதோடு பண்டிகை காலத்திலும் இந்திய மக்களுக்குத் தேவையான எல்பிஜி கேஸ் சப்ளையைச் தடை இல்லாமல் செய்ய முடியும் எனவும் சொன்னது அரசு எண்ணெய் நிறுவனங்கள்.
அதோடு எல்பிஜி கேஸை ஏற்றுமதி செய்யும் சவுதி அராம்கோ உட்பட அனைத்து நிறுவனங்களும் சொன்ன படி தங்கள் ஏற்றுமதிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதோடு இந்தியாவில் இருந்தும் போதுமான கேஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பற்றாக்குறைக்கு கூடுதலாக வேறு சில நாடுகளில் இருந்து, கேஸை இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுத்து இருக்கிறார்களாம். எனவே இந்த பண்டிகை காலத்தில் எல்பிஜி கேஸ் சப்ளையில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது எனச் சொல்லி இருக்கிறார்கள்.