பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank) கடந்த சில வாரங்களாக பத்திரிகைகளில் செய்தி அடிபடும் அளவுக்கு பல மோசமான செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்து கொண்டு இருக்கிறது.
அந்த மோசமான செயல்கள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக வெளியே தெரிய வந்து கொண்டு இருப்பதால், அந்த வங்கியில் பணம் போட்டிருப்பவர்கள் தங்கள் பணத்துக்கு என்ன ஆகுமோ என பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறார்.
பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் செய்திருக்கும் மோசடிகள் எல்லாம் வங்கியின் நிதி நிலையையே ஒரு ஆட்டு ஆட்டும் அளவுக்கு ஆழமான தவறுகளாக இருக்கிறதாம். இந்த வங்கி செய்த பல தவறுகளை ஆர்பிஐ வங்கியின் கண்களில் படாமல் மறைக்க இன்னும் பல தவறுகளைச் செய்திருப்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்களாம்.
போலி கணக்குகள்
அதில் மிக முக்கியமான தவறு, Housing Development and Infrastructure Limited (HDIL) நிறுவனம் வாங்கி இருக்கும் சுமார் 2.500 கோடி ரூபாய் கடன் தொகைக்கான தவணைகளை, குறிப்பிட்ட நேரத்தில் ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் விஷயத்தை மறைக்க பல போலி வங்கிக் கணக்குகளைத் தயாரித்து இருக்கிறார்களாம். இவ்வளவு பெரிய விஷயத்தை, அந்த வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸே முன் வந்து ஆர்பிஐயிடம் ஒப்புதல் வாக்கு மூலமே கொடுத்து இருக்கிறார்.
2008 முதலே
அதோடு "கடந்த 2008 முதல் வாங்கிய கடன்களை ஒழுங்காக திருப்பிச் செலுத்தாத கடன் கணக்குகளை, வாராக் கடன் கணக்குகளாக காட்ட வேண்டும். ஆனால் நாங்கள் ஆர்பிஐ கண்ணில் படாதவாறு ஒழுங்காக தவணைகளைக் கட்டாத கணக்குகளை மறைத்து இருக்கிறோம். அப்படி ஒருவேளை ஆர்பிஐ கண்ணில் பட்டால் வங்கியின் நல்ல பெயருக்கு பாதிப்பு ஏற்படும் என பயந்து இந்த மோசடிகளைச் செய்தோம்" என பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸே சொல்லி இருக்கிறார்.
அப்போதே 1,000 கோடி
2011-ம் ஆண்டு வாக்கில், பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் அளவு சிறியது தான். அப்போது வங்கிக்கு இந்தியா முழுக்க வெறும் 57 கிளைகள் தான். அப்போது ஒட்டு மொத்த வங்கியிலும் 2,824 கோடி ரூபாய் டெபாசிட் மற்றும் 2,000 கோடி ரூபாய் கடன் இருந்தது. அப்போதே Housing Development and Infrastructure Limited (HDIL) நிறுவனத்துக்கு சுமாராக 1,000 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருந்தோம் எனச் சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறார் ஜாய் தாமஸ்.
பணம்
அந்த 2011 காலகட்டத்திலேயே, Housing Development and Infrastructure Limited (HDIL) கணக்கை வாராக் கடனாக அறிவித்து இருந்தால், அந்த நிறுவனம் வாங்கி இருக்கும் கடனுக்கு வட்டி வசூலிக்க முடியாது. இவ்வளவு பெரிய கடனுக்கான வட்டியை வசூலிக்கவே இல்லை என்றால் வங்கியின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும், வங்கியின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு இருக்கும் என விளக்கம் கொடுத்து இருக்கிறார் முன்னாள் எம்டி ஜாய் தாமஸ்.
இன்றைய நிலை
இன்று பிஎம்சி வங்கிக்கு சுமார் 137 கிளைகள் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இதில் சுமார் 51,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சுமார் 11,600 கோடி ரூபாய் டெபாசிட்தாரர்களின் பணத்தை வைத்திருக்கிறது இந்த பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி. தற்போதைக்கு இந்த 11,000 கோடி ரூபாய் டெபாசிட்டில் சுமார் 2,500 கோடி ரூபாயை கடனாக Housing Development and Infrastructure Limited (HDIL) நிறுவனத்துக்கே கொடுத்து இருக்கிறார்கள்.
நம்புங்கள்
மேலும் "Housing Development and Infrastructure Limited (HDIL) நிறுவனம் எங்களிடம் வாங்கி இருக்கும் கடனை திருப்பி வசூலிக்க சரியான திட்டங்கள் இருக்கின்றன. Housing Development and Infrastructure Limited (HDIL) நிறுவனமும் தாங்கள் வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டார்கள். அதோடு வாங்கி இருக்கும் கடன் தொகைக்கு இணையான பிணைத் தொகையை அல்லது சொத்துக்களைக் வங்கியிடம் கொடுத்து இருக்கிறார்கள் எனவும் தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார் ஜாய் தாமஸ்.
அழுத்தம்
ஒவ்வொரு வருடமும், ஆர்பிஐயில் இருந்து மேற்பார்வைக்கு வரும் போதும், நாங்கள் இந்த வாராக் கடன் தகவல்களை மறைக்க வேண்டி இருக்கும். அப்போது பெரிய மன அழுத்தத்துக்கு உள்ளாவோம். அது எங்கள் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் கவலை அடையச் செய்தது எனவும் அசால்டாகச் சொல்லி இருக்கிறார் பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ்.
நடவடிக்கைகள்
சமீபத்தில் தான் அதனால் தான் ஆர்பிஐ தலையிட்டு டெபாசிட் செய்தவர்கள், ஒரு வங்கிக் கணக்குக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க வேண்டும் என மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. வாடிக்கையாளருக்கு இப்படி என்றால், வங்கி நிர்வாகம் இனி எக்காரணத்தை முன்னிட்டும்
புதிதாக கடன்களைக் கொடுக்கவோ,
கடன்களை ரெனீவ் செய்யவோ,
புதிதாக முதலீடுகளைச் செய்யவோ,
புதிதாக கடன் வாங்கவோ,
புதிதாக டெபாசிட்களை வாங்கவோ,
தன் சொத்துக்களை விற்கவோ கூடாது.
அப்படி எதையாவது செய்ய வேண்டும் என்றால் ஆர்பிஐயிடம் இருந்து எழுத்துப் பூர்வமாக ஒப்புதல் வாங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 6 மாத காலத்துக்கு இருக்கும் எனவும் கத்திக்கு மேல் கத்தியை பிஎம்சி வங்கி மீது தொங்கவிட்டு இருக்கிறது ஆர்பிஐ.
மக்கள் பிரச்னை
ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை வெளியே எடுக்க கூடாது என்கிற செய்தி மெல்ல பிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவுகிறது. இப்படிச் சொன்னவுடன் பிஎம்சி வங்கியில் பணம் போட்ட சாதாரண ஏழை எளிய மக்கள் பதறியடித்துக் கொண்டு தங்களுடைய வங்கிக் கிளைகளுக்கு ஓடி இருக்கிறார்கள். சில கிளைகளில் காலை 6 மணியிலிருந்தே வாடிக்கையாளர்கள் வரிசை கட்டி நின்று தங்கள் பணத்தை கேட்கத் தொடங்கி இருக்கிறார்களாம்.
பாதுகாப்பு
ஆர்பிஐ விதிமுறைகளை சொல்லி புரியவைக்க முடியாத வங்கி அதிகாரிகள், தங்கள் பாதுகாப்புக்கு கடைசியாக காவல் துறையினரை உதவிக்கு அழைத்து இருக்கிறார்கள். பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களின் எழுச்சியைப் பார்த்துவிட்டு தான், ஆர்பிஐ 1,000 ரூபாயாக இருந்த உச்ச வரம்பை 10,000 ரூபாயாக மாற்றி இருக்கிறது. இப்படி பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி செய்த தவறுகளை கண்டு பிடிக்கவே ஆர்பிஐக்கு 11 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், நம் இந்திய வங்கிகளின் வெளிப்படைத் தன்மையை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆர்பிஐ-ன் மேற்பார்வை மீது சந்தேகம் எழுகிறது.
அரசும் ஆர்பிஐயும்
ஏன் என்றால், வங்கியில் இருப்பது பெரும் பணக்காரர்களின் பணம் அல்ல, ஏழை எளிய மக்களின் சிறுகச் சிறுகச் சேர்த்த பணம்..! மக்களின் பணத்துக்கு அரசு வங்கிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் என்ன செய்ய..? அது நம்மைப் போன்ற வெகு ஜன இந்திய மக்களின் தலை எழுத்து என கதறி அழுவதைத் தவிற என்ன செய்ய முடியும்..? மக்களின் பயத்தையும் கண்ணீரையும் போக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம். ஆர்பிஐ தன் தவற்றை திருத்திக் கொள்ளட்டும்.