மும்பை : லட்சுமி விலாஸ் வங்கி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததன் காரணமாக ரிசர்வ் வங்கி அதிரடி இந்த வங்கியின் மீது PCA நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிகளவிலான வாராக்கடன் மற்றும் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு போதுமான நிதி வலிமை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த துரித தடுப்பு நடவடிக்கை என்பது, வங்கி நிதி செயல்பாடுகளில் திருப்தி இல்லாத நிலையில் அதன் செயல்திறனை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளின் இது முக்கிய நடவடிக்கை ஆகும்.
இது தான் இவ்வங்கியின் வரலாறு
தென் இந்தியாவை சேர்ந்த பிரபல வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி, 7 தொழிலதிபர்களால் கடந்த 1926ம் ஆண்டில் கருரில் உருவாக்கப்பட்டது. ராமலிங்க செட்டியார் என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த வங்கியின் நோக்கமே, தொழில் மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள மக்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்வதே என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1926ல் நவம்பர் 10ம்தேதி இவ்வணிகத்தைத் தொடங்க சான்றிதழைப் பெற்றது. எனினும் 1949ல் ரிசர்வ் வங்கி வங்கித் துறையின் கட்டுப்பாட்டாளராக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஜூன் 1958ல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கி உரிமைத்தை பெற்றது லட்சுமி விலாஸ் வங்கி. இந்த நிலையிலேயே ஆக்ஸ்ட் 11, 1958 அன்று முதல் இது ஒரு வணிக வங்கியாக செயல்பட ஆரம்பித்தது.
விரிவாக்கம்
இவ்வங்கி 1958ல் வணிக வங்கியாக செயல்பட ஆரம்பித்தாலும், குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக 1961 - 1965 ல் வளர்ச்சி கண்ட நிலையில், கணிசமான விரிவாக்கத்தையும் கண்டது. இதன் பின்னரே இவ்வங்கி மகராஷ்டிரா மற்றும் குஜராத், மத்தியபிரதேசம் உள்ள குறிப்பிட்ட வணிக மையங்களிலும் கிளைகளை நிறுவியது. இதற்கிடையில் 1977ல் சரவதேச அளவில் தனது சேவைகளை வழங்கும் அளவுக்கு வளர்ந்தது. பின்னர் கடந்த 1993ம் ஆண்டு வங்கியின் சொந்தக் குழுவினரால் தரவு செயலாக்கம் மற்றும் கணினிமயமாக்கல் என விரிவாக்கம் செய்தது. மேலும் கடந்த 2018ம் ஆண்டு நிலவரப்படி, இவ்வங்கியில் மொத்தம் 569 கிளைகள், 1046 ஏடிஎம்கள், மற்றும் 7 நீடிப்பு கவுண்டர்கள் என நிறுவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி இணைப்பு
இதன் பின்னர் கடந்த ஏப்ரல் 2019 அன்று, லட்சுமி விலாஸ் வங்கி வாரியம், நாட்டின் இரண்டாவது பெரிய வீட்டு நிதி நிறுவனமான இந்தியா ஃபுல்ஸ் ஹவிஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைக்க ஒப்பதல் பெறப்பட்டது. இந்த நிலையில் இந்தியா ஃபுல்ஸ் ஒருகிணைந்த இந்த கூட்டமப்பில் 90.5% பங்குகளை பெறுவார்கள் என்றும், இதே மீதமுள்ள 9.5% பங்குகளை லட்சமி விலாஸ் வங்கி பெறும் என்றும், இது இந்த இணைப்பிற்கு பின்னர் இந்தியா புல்ஸ் லட்சுமி விலாஸ் என்று அழைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
லட்சுமி விலாஸூக்கு தொடர் நஷ்டம்
கடந்த சில வருடங்களாகவே தொடர் நஷ்டத்தினை மட்டுமே கண்டு வந்த இந்த வங்கிகள், கடந்த 2019ம் நிதியாண்டில் பெருத்த நஷ்டத்தினையே கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2015 முதல் சிறும் லாபத்தில் இருந்து வந்த நிலையில் 2018 மற்றும் 2019ல் பெரும் நஷ்டத்தினை மட்டுமே கண்டது. இதனால் கடந்த ஜூலை 2017ல் 189 ரூபாயாக இருந்த பங்கின் விலை, இன்று வெறும் 33 ரூபாயாக மட்டும் உள்ளது, இந்த நிலையில் ஒரு பங்கிற்கு ரூ.156 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கிக்கு கிட்டதட்ட சுமார் 4,990 (319903230 பங்குகள் ) கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருவாயும் குறைவு
குறிப்பாக வட்டி வருவாயும் தொடர்ந்து இவ்வங்கியில் குறைந்து கொண்டே வந்த நிலையில் இவ்வங்கி இப்படி இணைப்பு நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டது என கூறலாம். குறிப்பாக கடந்த ஜூன் 2018ல் 726.99 கோடி ரூபாயாக இருந்த வருவாய், ஜூன் 2019ல் 623. 94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே கடந்த மார்ச் 2015ல் 230.15 கோடி ரூபாயாக இருந்த செலவினம், கடந்த மார்ச் 2019ல் 401 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் மற்ற வருவாய்களும் இந்த சமயத்தில் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஜூன் 2018ல் 60.51 கோடி ரூபாயாக இருந்தது, ஜூன் 2019ல் 53.22 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆக வருமானம் குறைந்து செலவினங்களே இவ்வங்கியை ஆட்டி படைக்க தொடங்கியது உண்மையே.
நிகர லாபம் எப்படி இருந்தது?
இந்த வங்கியின் லாபம் தொடர்ந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மார்ச் 2015ல் 132.20 கோடி ரூபாயாக இருந்த, இத நிகரலாபம், 2016ல் 180.21 கோடி ரூபாயாகவும், 2017ல் 256.07 கோடி ரூபாயாகவும், இதே 2018ல் 584.87 கோடி ரூபாய் நஷ்டமும், இதே 2019ல் 894.10 கோடி ரூபாய் நஷ்டமும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கி இணைப்பு பாதிப்பில்லை
இந்த நிலையிலே இந்த வங்கி இணைப்புக்கு கடந்த ஆண்டு முதல் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது, நஷ்டத்தில் உள்ள இவ்வங்கி தற்போது, பி.சி.ஏ நடவடிக்கையால் எப்படி இத்துணை நஷ்டத்தினையும் மேம்படுத்த முடியும் என்பது ஒரு புறம் கேள்விக்குறியாகவே இருந்தாலும், மறுபுறம், இந்தியா புல்ஸ் மற்றும் எல்.வி.பி இணைப்புக்கு பிரச்சனையாக இருக்குமா? என்றும் கருதப்பட்டு வந்த நிலையில், இந்தியா ஃபுல்ஸ் நிறுவனம் இப்பிரச்சனையால் வங்கி இணைப்புக்கு எந்த பாதகமும் இல்லை, வங்கிகள் இணைக்கப்படுவது உறுதிதான் என்றும் கூறியுள்ளது.
சாமானிய மக்களின் கதி என்ன?
ஒரு புறம் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், பெரிய அளவில் டெபாசிட் செய்திருந்தவர்களும், இவ்வங்கியை முழுமையாக நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் இந்த வங்கி பங்கின் விலை கடந்த சந்தைகளில் லோ பீரிஸ் ஆகியது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலீட்டாளர்களும் பெருத்த நஷ்டம் கண்டுள்ளது உண்மையே. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை மேம்படுத்த ஒரு வகையில் நல்ல விஷயம் என்றாலும், இதனால் சில சாமானிய மக்கள் இதனால் பாதிக்கப்படுவது நிசப்தமான உண்மையே.