இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பற்றி பல நிறுவனங்களும் தங்கள் கணிப்புகளைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இதற்கு முன் வெளியிட்ட கணிப்புகளை எல்லாம், இப்போது ஒவ்வொரு நிறுவனமாக திருத்திக் கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது S&P குளோபல் ரேட்டிங் நிறுவனமும் இணைந்து இருக்கிறது.
இன்று S&P குளோபல் ரேட்டிங் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பில், இந்த 2019 - 20 நிதி ஆண்டில் 6.3 சதவிகிதம் வளர்ச்சி காணலாம் எனக் கணித்து இருக்கிறது. இதற்கு முன் இதே நிறுவனம் 2019 - 20 நிதி ஆண்டில் 7.1 சதவிகிதம் வளர்ச்சி காணும் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2020 - 21 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் மீண்டு வந்து சுமார் 7 சதவிகிதம் வரை பொருளாதார வளர்ச்சி காணும் எனவும் சொல்லி இருக்கிறது S&P குளோபல் ரேட்டிங்.
தற்போது இந்தியப் பொருளாதார சரிவு, எதிர்பார்த்ததை விட ஆழமாகவும், பரவலாகவும் இருக்கிறது. மார்ச் ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் வெறுமனே 5 சதவிகிதம் வளர்ந்து இருக்கிறது. மிக முக்கியமாக இந்தியாவில் தனியார் நுகர்வு மிகப் பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. இந்த தனியார் நுகர்வு தான் கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டு இருந்தன என தன் காலாண்டு அறிக்கையில் சொல்லி இருக்கிறது S&P குளோபல் ரேட்டிங்.
அதோடு இந்தியாவில் தற்போது பணவீக்கம் குறைந்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது. தற்போது இந்தியாவின் பண வீக்கம் குறைவாக இருப்பதால், மத்திய ரிசர்வ் வங்கியால் நிம்மதியாக, வட்டி விகிதங்களைக் குறைக்க முடிந்து இருக்கிறது. இந்த பணவீக்கம் குறைவாக இருப்பது ஒரு பெரிய வரம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறது S&P குளோபல் ரேட்டிங் நிறுவனம். இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி 1.10 சதவிகிதம் வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறது. தற்போது அக்டோபர் 04, 2019 அன்று நடக்க இருக்கும் வட்டி விகித கூட்டத்திலும் மேலும் 0.24 சதவிகிதம் வட்டியைக் குறைக்க இருப்பதாகவும் கணிப்புகளும், செய்திகளும் வருகின்றன.