டெல்லி : பில்லியனர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, சவுதியை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனம் நாங்கள் அக்டோபரில் எவ்வளவு எண்ணெய் கொடுப்பதாக கூறியிருந்தோமோ, அதை கண்டிப்பாக கொடுப்போம் என்று உறுதி கொடுத்துள்ளது.
சவுதி அரசின் சவுதி அராம்கோ நிறுவனத்தின் மீது, கடந்த சில வாராங்களுக்கு முன்பு, அதன் எண்ணெய் ஆலையும் மற்றும் எண்ணெய் வயலும் தாக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டது.
சர்வதேச அளவில் சுமார் 10 சதவிகிதம் அளவு சப்ளை செய்யும் அளவு திறன் வாய்ந்த இந்த நிறுவனம் தாக்கப்பட்டதையடுத்து, சர்வதேச சந்தையில் சுமார் 20 சதவிகிதத்திற்கும் மேல் கச்சா எண்ணெய் விலையேற்றம் கண்டது. இந்த நிலையில் அதிகளவு இறக்குமதியை மட்டுமே நம்பிருக்கும் இந்தியாவுக்கு பெரும் அடியாகவே இருக்கும் என்றும் கருதப்பட்டது.
கவலைபடாதீங்க சொன்னதை செய்வோம்
இந்த நிலையிலேயே அதிகளவு எரிபொருள் இறக்குமதியில் ஈடுபட்டு வரும் சவுதி அராம்கோ நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும், முக்கிய இறக்குமதியாளராக இருந்து வந்தது. இந்த நிலையில் வரும் பண்டிகைகால சீசனில் பெரிய அளவில் இறக்குமதி தடைபடுமே என்ற கவலையும் நீடித்து வந்த நிலையில், சவுதி அராம்கோ நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்த அளவில் எண்ணெய் வழங்குவதாக உறுதி கொடுத்துள்ளது. இதனால் தேவைக்கேற்ப எண்ணெய் கிடைத்துவிடும் என்றும் கருதப்படுகிறது. இதனால் எண்ணெய் பற்றாக்குறை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸூக்கு ரெகுலர் சப்ளையர்
கடந்த 20 வருடங்களாகவே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, சவுதி அராம்கோ நிறுவனம் தொடர்ந்து அதிகளவிலான எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இது குறித்து அந்த நிறுவனம் கூறுகையில் கடந்த செப்டம்பர் 14 அன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டதையடுத்து, சவுதி அராம்கோவின் உற்பத்தி 5.7 மில்லியன் பேரல்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இது இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மாற்று முறையில் இறக்குமதி செய்யும் என்றும், இதனால் இறக்குமதி பாதிக்காது என்றும் கூறப்பட்டு வந்தது.
இதுவரை பாதிப்பு ஏதும் இல்லை
சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல் தாக்கப்பட்டிருந்தாலும், எண்ணெய் இறக்குமதியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை, மாறாக வேறு மாற்று மூலம் இதுவரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தேவையான எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதுவரை திட்டமிட்ட விநியோகத்தினை சரியாக செய்து வருகிறது. அதிலும் சவுதி அராம்கோவில் பிரச்சனை ஏற்பட்டதுமே குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் இருக்கும் இரட்டை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, உடனடி மாற்று தரப்பு கச்சா எண்ணெய் வழங்கி வந்ததாகவும் ரிலையன்ஸ் கூறியுள்ளது.
அக்டோபரிலும் விநியோகத்தில் மாற்றம் இருக்காது
இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதத்திலும் ரிலையன்ஸ் அக்டோபரிலும் விநியோகத்தில் மாற்றம் இருக்காது என்றும் சவுதி அராம்கோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் தனது ஜாம் நகர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆலைகளை உள்ளடக்கிய எண்ணெய் ரசாயன வியாபாரத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சுமார் 75 பில்லியன் டாலர் மதிப்பில் சவுதி அராம்கோவிற்கு விற்க உள்ளதாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த மாதமே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸூடன் ஒப்பந்தம்
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல்கள் எண்ணெய் வழங்கப்படும் என்றும் சவுதி அராம்கோவுடனான ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவை பொறுத்த வரை இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதில், குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சப்ளை செய்வதில் எந்த வித பிரச்சனையும் இருக்காது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதற்கிருக்கும் கடன் பிரச்சனையும் இதனால் விரைவில் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.