சென்னை : பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கும் நோக்கில் இந்திய அரசின் நிதித்துறை பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை ஒரே மாதிரியாக மாற்றி அமைக்க இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ) முடிவு செய்து உள்ளது.
தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. மேலும் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கம், பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை நாடுமுழுவதும் ஒரே மாதிரி மாற்றி அமைக்கும்படியும், அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
இந்த அறிக்கையில் காலை 9 - மாலை 3 மணி வரையிலும், இதே காலை 10 - 4 மணி வரையிலும், மற்றொரு நேரமாக காலை 11 - மாலை 5 மணி வரையிலும் என 3 வகையாக வாடிக்கையாளர் சேவை நேரத்தை அறிவித்திருந்தது, மேலும் இதில் ஏதாவது நேரத்தை தேர்ந்தெடுக்கும்படியும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன் படி தமிழக அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர் சேவை நேரத்தை காலை 10 - மாலை 4 மணி வரை ஒரே மாதிரியாக இருக்கும்படி மாற்றி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்களுக்கு, முன்பை விட இன்னும் கூடுதலாக 30 நிமிட சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகம் மட்டும் அல்ல மத்திய பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் இதே நேரம் கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. மேலும் வங்கி ஊழியர்களுக்கான மதிய உணவு இடைவேளையானது மதியம் 2 மணி முதல் - 2.30 மணி வரை என்றும் கூறப்பட்டுள்ளது.