Recommended Video
டெல்லி : டெல்லியில் இருந்து ஜம்மு - காஷ்மீரில் உள்ள கத்ராவுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த நிலையில், இந்த ரயில் அக்டோபர் 5ம் தேதி முதல் இயங்கத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ரயில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் விதமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கடைசி ரயில் நிலையம் தான் கத்ரா ஆகும். இந்த நிலையில் டெல்லியிலிருந்து கத்ரா செல்ல வழக்கமாக 12 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 8 மணி நேரத்தில் கடந்து விடும் என்பது தான் இதன் ஹைலைட்டே.
இது வளர்ச்சிக்கான பயணம்
இந்த ரயிலினை தொடங்கி வைத்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பின்னர் உரையாற்றியபோது அடுத்த 10 ஆண்டுகளில் காஷ்மீர் இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக மாறியிருக்கும். மேலும் இங்கு ஆன்மிகச் சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சியடையும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் தயாரான இந்த ரயிலை தொடங்கி வைப்பதில் நான் மிக பெருமை கொள்கிறேன். சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கான பயணமும் தொடங்கியுள்ளது என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
இது நவராத்திரி பரிசு
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜம்மு - காஷ்மீரில் வாழும் சகோதர, சகோதரிகளுக்கு வந்தேபாரத் ரயில் தான் நவராத்திரி பரிசு. இதன் மூலம் கத்ரா டெல்லியுடன் இணைக்கப்படுவது அந்த நகரத்தின் முன்னேற்றத்துக்கு உதவும் எனவும் கூறியுள்ளார். மேலும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் எனவும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்டணம் எவ்வளவு?
இந்த வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு கத்ரா சென்றடையும் என்றும், இடையில் அம்பாலா கன்ட், லூதியானா, ஜம்மு தாவி ரயில் நிலையங்களில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் 3 மணிக்கு கத்ராவிலிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு டெல்லியை வந்தடையும் என்றும், இதற்கு ரயில் கட்டணமாக குறைந்த பட்சம் ரூ.1,630-ம் அதிகபட்சமாக 3,015-ம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
என்ன சிறப்பு இந்த ரயிலில்?
முதன் முதலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில், பல அம்சங்கள் உள்ளதாகவும், குறிப்பாக சிறந்த உட்புற வசதிகள், வைஃபை வசதி, பயோ வாக்கியூம் டாய்லெட் வசதி, ஜிபிஎஸ் அடிப்படையிலான இன்ஃபோடெயின்ட்மென்ட் வசதி, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலானது வாரத்தில் செவ்வாய்கிழமை தவிர எல்லா நாளும் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் இரண்டு எக்ஸ்சிகியூட்டிவ் சேர் கார் மற்றும் 12 சேர் கார் கோச்சுகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.