டெல்லி : இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்றும் கூறப்பட்டது. பலரும் எதிர்பார்த்ததைப் போலவே 5-வது முறையாக ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடப்பு நிதியாண்டில் 4 முறை வட்டி விகிதத்தினை 1.10 சதவிகிதம் வரை குறைத்துள்ள நிலையில், இந்த முறையும் குறைத்துள்ளது. இந்த முடிவுகளால் துவண்டு போயுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையிலேயே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது 0.25 சதவிகிதம் வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறது ஆர்பிஐ. வட்டி விகித குறைப்புக்கு முன் ஆர்பிஐ-ன் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் 5.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ரெப்போ ரேட் வட்டி விகிதம் குறைத்திருப்பதால் இனி ஆர்பிஐ-ன் அடிப்படை ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.15 சதவிகிதமாக இருக்கும்.
ஏற்கனவே, கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வட்டி குறைப்பு மேலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி துறைக்கு இன்னும் குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்க உதவும் என்கிறார்கள்.
தற்போது பால வங்கிகள் தொடர்ந்து தங்கள் கடன்களை ரெப்போ ரேட் அடிப்படையிலான கடன்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே புதிதாக கடன் வாங்கியவர்கள், பழைய கடன்களை ரெப்போ ரேட் அடிப்படையிலான கடன்களாக மாற்றியவர்கள் எல்லோருக்கும் இந்த வட்டி குறைப்பினால் நன்மை ஏற்படும். எனவே வீட்டுக் கடன், கார் கடன் போன்றவைகளுக்கான வட்டி குறையும் என்கிறார்கள்.
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து, பெற்ற கடனை திருப்பி செலுத்தும் போது செலுத்த வேண்டிய வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் குறையும், இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் மீதான கடன் மீதான வட்டி விகிதம் குறையும். எனவே சந்தையில் குறைந்த வட்டியால் தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications