அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் 3.5 சதவிகிதமாக கடந்த செப்டம்பர் 2019-ல் குறைந்து இருக்கிறதாம். அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் 100 பேர் வேலை பார்க்கும் தகுதி உடன் இருக்கிறார்கள் என்றால், அதில் 3.5 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்காமல் இருந்து இருக்கிறார்கள் என் பொருள்.
ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கின்ற போதும், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் உலகின் மிகப் பெரிய வர்த்தகப் போர் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் ஓரளவுக்கு நிலையாக அதிகரித்து இருப்பதையே இது காட்டி இருக்கிறது. உண்மையாகவே இது பெரிய விஷயம் தான்.
இருப்பினும் வருத்தப்படக் கூடிய விஷயங்களும் இந்த வேலை இல்லா திண்டாட்டம் குறித்த, அமெரிக்க அரசின் அறிக்கையில் இருக்கின்றன. அமெரிக்க தொழிலாளர்களுக்கு கூலி உயரவில்லை. இதற்கு முன் வழங்கப்பட்டு வந்த அதே கூலி தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதோடு உற்பத்தி துறையில் சம்பளம் கொடுப்பதும் கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக குறைந்து இருக்கிறதாம். சில்லறை மற்றும் யுடிலிட்டி துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது அமெரிக்க தொழிலாளர் துறையின் இந்த வேலை இல்லா திண்டாட்டம் குறித்த அறிக்கை.
அதோடு அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க உற்பத்தி துறை சரிந்து இருக்கிறதாம். அதோடு கடந்த 2016-ம் ஆண்டில் இருந்த அளவுக்கு அமெரிக்க சேவைத் துறையும் சரிந்து இருக்கிறதாம். இந்த இரண்டு பெரிய பொருளாதார காரணிகளும் சரிந்து இருப்பதால் தான் இப்போது அமெரிக்க பொருளாதாரத்தை ரெசசன் பேய் பிடித்து இருக்கிறதா..? என அமெரிக்கர்களைப் பதற்றத்தில் வைத்துக் கொண்டு இருக்கிறதாம்.
"பொதுவாக ரெசசன் காலத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கும். ஆனால் இப்போது அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து இருக்கிறது. எனவே ரெசசன் இப்போதைக்கு வராமல் அடுத்த 2020-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது" என உண்மையைச் சொல்லி பயமுறுத்துகிறார் iCIMS நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார வல்லுநர் ஜோஷ் ரைட்.
அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம் 50 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு குறைந்து இருக்கிறது. ஆனால் நம் இந்தியாவிலோ நேர் மாறாக கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து நம்மையும், நம் வேலை வாய்ப்புகளையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.