கடந்த சில வாரங்களாக, பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியும், அந்த வங்கியிடம் சுமார் 2,500 கோடி ரூபாய் கடன் வாங்கிய ஹவுசிங் டெவலெப்மெண்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் HDIL நிறுவனம் குறித்தும் அடிக்கடி செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இந்த HDIL நிறுவனத்துக்கு மட்டும் 2,500 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருப்பதால் தான், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க முடியும் என ஆர்பிஐ இடமிருந்து உத்தரவுகள் வந்தன.
அதை வாடிக்கையாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பணம் எடுத்தல்
தொடர்ந்து வங்கி அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன், பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். முதலில் 1,000 ரூபாய் என்கிற உச்ச வரம்பு 10,000 ரூபாயாக குறைந்தது. அதன் பின்னும் கடுமையான வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளுகள், கோரிக்கைகளுக்குப் பின் இப்போது பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 25,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என ஆர்பிஐ தன் இரும்புப் பிடியைத் தளர்த்தி இருக்கிறது. சரி HDIL சொத்து பறிமுதலுக்கு வருவோம்.
கைது
சில நாட்களுக்கு முன்பு தான் HDIL நிறுவனத்தை வழி நடத்துபவர்களாக இருக்கும் ராகேஷ் வாதவான் மற்றும் சாரங் வாதவான் ஆகியோர்களை, மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து, அவர்கள் பெயரில் உள்ள சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல சொத்துக்களை பறிமுதல் செய்தார்கள். அதன் பிறகு ராகேஷ் வாதவான் மற்றும் சாரங் வாதவான் ஆகிய இருவருக்கும் அக்டோபர் 09 வரை கஸ்டடியில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கினார்கள்.
2 தனி விமானம்
தற்போது மேற்படி விசாரித்த பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு இன்னும் பல சொத்துக்கள் விவரம் தெரிய வந்து இருக்கிறது. கிடைத்த தகவல்களை வைத்து விசாரித்த போது ஏற்கனவே ஒரு தனி விமானம் (Bombardier Challenger-300) பறிமுதல் செய்யப்பட்டது போக மற்றும் ஒரு தனி விமானம் (Phalcon) சிக்கி இருக்கிறது. இந்த விமானமும் ராகேஷ் வாதவான் மற்றும் சாரங் வாதவான் ஆகியோர்களுக்குச் சொந்தமானது எனவும் உறுதி செய்து இருக்கிறார்கள்.
சொகுசு பங்களா
அதோடு, மும்பை ராய்கட் மாவட்டத்தில் இருக்கும், அலிபாக் என்கிற ஊரில் சுமார் 2.5 ஏக்கர் நில பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் 22 அறைகளைக் கொண்ட சொகுசு பங்களா பற்றிய விவரங்களும் தெரிய வந்து இருக்கிறதாம். அதோடு அலிபாக் சொகுசு பங்களாவில் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், கோல்ஃப் மைதானங்கள் என சகல வசதிகள் கொண்ட பங்களாவாக இருக்கிறதாம்.
பறிமுதல் பணிகள்
அதோடு ஒரு அதிவேக கப்பலும் இந்த பங்களாவுக்கு அருகிலேயே நிறுத்தி இருந்தார்களாம். இந்த சொகுசு பங்களாவை மும்பை பொருளாதார குற்றப் பிரிவினர் பறிமுதல் செய்வதற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார்களாம். மேலும் சாரங் வாதவானின் மனைவி அனு மற்றும் சாரங் வாதவானின் தாயார் ஆகியோர்களையும் அழைத்து, பொருளாதார குற்றப் பிரிவினர் விசாரித்து வருகிறார்களாம்.
மதிப்பு என்ன..?
இன்னும் இந்த சொகுசு பங்களா, இரண்டாவது தனி விமானம் போன்றவைகளின் மதிப்பு வெளியாகவில்லை. இவர்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால் இந்த பங்களா மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் போகும் போல் இருக்கிறதே..! இதோடு கூடுதல் செய்தி என்ன என்றால், இந்த அலிபாக் வீடு விதிமுறைகளை மீரி கட்டப்பட்டு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அதெப்படி வங்கி மோசடிகளில் மாட்டும் அனைவரும் இப்படி விதிமுறைகளை மீறி வீடுகளைக் கட்டுவார்கள் என்று தான் புரியவில்லை.